தமிழ்நாட்டை ஆளப் போவது கவுண்டர் தான், சர்ச்சையை கூட்டிய திண்டுக்கல் சீனிவாசன்

வருங்கால முதலமைச்சர் கவுண்டர் தான், ஒரு கவுண்டர் கையில்தான் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்று, சாதியை குறிப்பிட்டு திண்டுக்கல் சீனிவாசன் ஓட்டு கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நடுரோட்டில் இறங்கி குத்தாட்டம் போட்டும் கூட்டம் கூடாததால், மல்லிகைப்பூ அச்சிடப்பட்ட டோக்கன்களை வழங்கி மக்களுக்கு 200 ரூபாய் விநியோகம் செய்துள்ளதாகவும் மற்றொரு சர்ச்சையும் எழுந்துள்ளதால் அதிமுகவினர் புலம்பும் நிலையில் உள்ளனர்.

திண்டுக்கல் தொகுதியில்… 2026 சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் மொத்தம் 20 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் திமுகவை சேர்ந்த ஐ.பெரியசாமியின் மகனும், பழனி தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவுமான ஐ.பி.செந்தில்குமாரும், அதிமுகவை சேர்ந்த திண்டுக்கல் சிட்டிங் எம்எல்ஏ சீனிவாசனும் தான் வாக்கு ரேஸிலேயே உள்ளனர். நத்தம் விஸ்வநாதனின் அரசியல் செயல்பாடுகள் பெரிய அளவில் இல்லாததால், தற்போதைக்கு திண்டுக்கல்லில் அதிமுகவின் அடையாளமாக பார்க்கப்படுபவர் சீனிவாசன் தான்.

திண்டுக்கல் சீனிவாசன் Vs திமுக 2021 சட்டமன்ற தேர்தலில்கூட சுமார் 18,600 வாக்குகள் வித்தியாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்தார். இதையெல்லாம் கூட்டிக்கழித்து கணக்குப்போட்ட திமுக தலைமை, சீனிவாசனை வீழ்த்தினால் ஒட்டுமொத்த மாவட்டத்தையே தங்கள் கைக்குள் கொண்டுவந்துவிடலாம் என திட்டமிட்டே திண்டுக்கல்லை ஐ.பி.செந்தில்குமாருக்கு ஒதுக்கி உள்ளதாக கூறப்பட்டது.

இதற்குமத்தியில், அதிமுகவின் சீனியர் அரசியல்வாதியான திண்டுக்கல் சீனிவாசன் இந்த முறை வெற்றி பெற்றால்தான் கட்சிக்குள்ளும் சரி, தொகுதியிலும் சரி செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ளலாம்.. இல்லாவிட்டால் அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகும் என்ற நிலைதான் உள்ளது.

ஜாதி குறித்து சர்ச்சை பேச்சு உள்ளூர் கள நிலவரம் இப்படி இருக்க திண்டுக்கல் சீனிவாசனின் துடுக்குப் பேச்சும், பிரச்சாரத்தின்போது அவரது ஆதரவாளர்கள் மல்லிகைப்பூ டோக்கன் விநியோகம் செய்துள்ளதும் நிலைமையை இன்னும் கஷ்டகாலத்திற்கு தள்ளி உள்ளது. காப்பிலியப்பட்டி பகுதியில் மக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்ட திண்டுக்கல் சீனிவாசன், நீங்கள் அனைவரும் ஒக்கலிக கவுண்டர்கள் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொங்கு வேளாளர் கவுண்டர். எனவே கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர்தான் வருங்கால முதலமைச்சர் ஆகப்போகிறார் என கூறினார்.

தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறது?நாம் அத்தனைபேரும் கடுமையாக உழைத்து கவுண்டர் கையில் தமிழ்நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனக்கூறிய திண்டுக்கல் சீனிவாசன், 4 ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது ஆட்சியை திறம்பட நடத்தியாகவும் பேசினார். சாதியை குறிப்பிட்டு வாக்குக்கேட்ட அவர், இடையே சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு உழைக்க வேண்டும் எனவும் கூறிக்கொண்டது விநோதமாக இருந்தது.

சாதி அல்லது மத ரீதியாகப் பிரச்சாரம் செய்தால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்ட வேட்பாளரின் தேர்தல் செல்லாததாக அறிவிக்கப்படும். ஒருவேளை அந்த வேட்பாளர் வெற்றியே பெற்றாலும் அந்த வெற்றி செல்லாததாக அறிவிக்கப்படும். மேலும், சம்பந்தப்பட்ட நபர் 6 ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிடத் தகுதி நீக்கம் செய்யப்படலாம். இந்த விதிமுறைகளை அறிந்தும் பழுத்த அரசியல்வாதியான திண்டுக்கல் சீனிவாசன் சாதியை சொல்லி ஓட்டு கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மல்லிகைப்பூ டோக்கன் இந்த சர்ச்சைக்கே விடை தெரியவில்லை. இதற்கு மத்தியில் தந்தை சீனிவாசனுக்காக அவரது மகன் ராஜ்மோகன் இறங்கி குத்தாட்டம் போட்டு வாக்கு சேகரித்து வருகிறார். அந்த குத்தாட்டமும் கூட்டத்தை கூட்டாததால் அடுத்து மல்லிகைப்பூ டோக்கன் வழங்கியதாக புகார் எழுந்துள்ளது.

அதாவது, திண்டுக்கல் சீனிவாசன் பிரச்சாரத்திற்கு வரும் முன்பே மல்லிகைப்பூ படம் அச்சிடப்பட்டு மக்களுக்கு ஒரு டோக்கன் வழங்கப்படுவதாகவும், பிரச்சாரம் முடிந்தபிறகு அந்த டோக்கனை வைத்து மக்களுக்கு 200 ரூபாய் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. இது தொடர்பான வீடியோவும் உலா வருகிறது. ஏற்கனவே திண்டுக்கல்லை திமுக கண் வைத்திருக்கும் நிலையில் தற்போது சீனிவானின் பேச்சும், டோக்கன் புகாரும் அதிமுகவினரை கலக்கத்தில் தள்ளி உள்ளது.

              

Source link