ஹார்முஸ் ஜலசந்தி குறித்து அவர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படுமா என்பது குறித்தும் அவர் எந்த தகவலையும் வெளியிடவில்லை. அமெரிக்க துணை அதிபர் வான்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘எங்களது கோட்பாடுகளை அமெரிக்க அரசிடம் எடுத்துரைத்து உள்ளோம். ஈரானின் நம்பிக்கையை பெறுவது அமெரிக்காவின் கையில் உள்ளது. ராஜ்ஜியரீதியிலான அல்லது ராணுவ நடவடிக்கை மூலம் ஈரான் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் துணை பிரதமர் முகமது இஷாக் டார் இஸ்லாமாபாத்தில் கூறியபோது, ‘‘அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தாலும் போர்நிறுத்தத்தை இரு நாடுகளும் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மேற்கு ஆசியாவில் நிரந்தர அமைதி திரும்ப வேண்டும்’’ என்றார்.
டெஹ்ரானில் ஈரான் வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயிகூறியபோது, ‘‘பாகிஸ்தானில் நடந்த பேச்சுவார்த்தையில், சில விவகாரங்களில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது. ஆனால், 3 விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் எழுந்தன. இதன் காரணமாக பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. ஈரானின் உரிமைகள், ஈரான் மக்களின் நலன்களை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது’’ என்றார்.
