தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடும் குறிப்பிட்ட சில தொகுதிகளில் அதிலும் குறிப்பாக பாமக போட்டியிடும் தொகுதிகளில் தன்னுடைய வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.
சேலம் மேற்கில் போட்டியிடும் சிட்டிங் எம்.எல்.ஏ அருளை ஆதரித்து பரப்புரை செய்ய, மகள் ஸ்ரீகாந்தியுடன் நேற்று காலையே சேலம் வந்தார். மாலை பள்ளபட்டி கூட்டத்தில் பேசிவிட்டு ஓமலூர் அருகே நடைபெறும கூட்டத்தில் கலந்துகொள்ள கட்சியினர் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றபோது திடீரென்று மயங்கியதாகச் சொல்லப்பட, இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 86 வயதாகும் டாக்டர் ராமதாஸ் மயக்கம் அடைந்ததற்கான காரணம் என்னவென்று மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கவில்லை
அவர் மருமகளும் அன்புமணியின் மனைவியுமான சௌமியா போட்டியிடும் தருமபுரியில் அவரை எதிர்த்து இன்று பரப்புரை செய்ய டாகடர் ராமதாஸ் திட்டமிட்டிருந்த நிலையில் கூட்டம் நடைபெறாது என்று சொல்லப்படுகிறது.
இதுகுறித்து ராமதாஸ் ஆதரவு பாமகவினரிடம் விசாரித்தபோது, “ஏற்கனவே அன்புமணி கட்சியைக் கைப்பற்றியதால் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகளில் சாதகமான உத்தரவு வராததால் கவலையில் இருந்த டாக்டர் ராமதாஸ் ஐயாவுக்கு, பரப்புரைக்காக அவர் சேலம் கிளம்பி வந்தத தகவல் தெரிந்து கடலூர் மாவட்டத்தில் பரப்புரையில் ஈடுபட்டு வந்த அன்புமணி ராமதாஸ், தைலாபுரம் தோட்டத்திற்குச் சென்று தாயார் சரஸ்வதியைச் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசியதும், தேர்தலில் வெற்றிபெற ஆசியும் பெற்ற தகவல் மகள் ஸ்ரீகாந்திக்குத் தெரிந்து டாக்டர் ராமதாசிடம் கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்தது கூட மயக்கமடையக் காரணமாக இருக்கலாம்” என்றார்கள்.
இந்த நிலையில் தகவல் கேள்விப்பட்ட அன்புமணி , “டாக்டர் ராமதாஸுக்கு ஏதாவது ஒன்று என்றால் அவரைச் சுற்றியிருப்பவர்களைச் சும்மா விட மாட்டேன்” என்று எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
