குவாலியர்; மத்திய பிரதேசத்தில் கோயில் விழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் பலியானார். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு:
மத்திய பிரதேசம், குவாலியர் மாவட்டத்தில் தாப்ரா நகரில் நவகிரக கோயில் உள்ளது. கோயிலில் கலச யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் கலந்து கொள்ள நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டு இருந்தனர்.
அவர்களுக்கு கலசங்களை வினியோகிக்கும் பணி தொடங்கியது. அப்போது ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்துக் கொண்டு கலசங்களை வாங்க எத்தனித்தனர். கலசம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற வேகத்தில் பெண்கள் முன்னேற, கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிலர் கீழே விழுந்தனர். 70 வயது கொண்ட பெண்மணி ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார். 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
உயிரிழந்த பெண்மணி யார் என்ற விவரம் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
