லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான விவகாரத்தில், காங்., – தி.மு.க., உட்பட, ‘இண்டி’ கூட்டணி கட்சிகளின், 118 எம்.பி.,க்கள் கையெழுத்திட்டுள்ள நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., – எம்.பி.,க்கள் யாரும் கையெழுத்திடவில்லை. இதன் மூலம், இண்டி கூட்டணியின், ‘ஒற்றுமை’ மீண்டும் ஒரு முறை அம்பலமாகி உள்ளது.
பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியதில் இருந்தே, லோக்சபாவில் அலுவல்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி உரை மீதான விவாதத்திற்கு, மரபின் படி, பிரதமர் வழங்க வேண்டிய பதிலுரை கூட நடக்கவில்லை.
ராணுவ முன்னாள் தளபதி நரவனே எழுதி, இதுவரை வெளியாகாத அவரது சுயசரிதையான, ‘போர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ்டினி’ என்ற புத்தகத்தை வைத்து, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கிளப்பிய விவகாரத்தால், பட்ஜெட் மீதான விவாதமும் முடங்கி உள்ளது.
இந்நிலையில், லோக்சபாவில் நேற்று காலை கேள்வி நேரம் துவங்கியது. கூடவே அமளியும் துவங்கியது.
ஒத்தி வைப்பு
கடும் அமளிக்கிடையே பேசிய பார்லி., விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, ”உங்கள் அனைவரையும் கைகூப்பி கேட்கிறேன். தயவு செய்து அலுவல்களை தடுக்காதீர்கள். பட்ஜெட் மீதான விவாதத்தை நடத்த அனுமதியுங்கள். முற்றுகையிடுவதன் மூலம், சபையின் கண்ணியத்தை சீர்குலைக்காதீர்கள்,” என்றார். இருந்தும் அமளி தொடரவே, சபை மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டது.
மதிய உணவு இடைவேளையின் போது, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், லோக்சபா செக்ரட்டரி ஜெனரல் உத்பல் குமார் சிங்கின் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு, சபாநாயகர் ஓம் பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டுமென்று வலியுறுத்தி நோட்டீசை வழங்கினர்.
இதில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 118 எம்.பி.,க்கள் கையெழுத்திட்டனர். ஆனால், திரிணமுல் காங்., – எம்.பி.,க்கள் யாரும் கையெழுத்திடவில்லை.
பின், நிருபர்களிடம் பேசிய லோக்சபா காங்., துணைத் தலைவர் கவுரவ் கோகோய், ”விதி எண், 94 (சி)ன் கீழ் நோட்டீஸ் தந்துள்ளோம். நாங்கள் பேசுவதற்கு தொடர்ச்சியாக வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால், எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. அதனாலேயே இந்த முடிவுக்கு தள்ளப்பட்டோம். இதில், 118 எம்.பி.,க்கள் கையெழுத்திட்டுள்ளனர்,” என்றார்.
நோட்டீசில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு பேச அனுமதி மறுப்பு; ஆளுங்கட்சி எம்.பி.,க்களுக்கு மட்டும் பேச வாய்ப்பு; பிரதமர் மோடியை தாக்க முயற்சித்ததாக பெண் எம்.பி.,க்கள் மீது குற்றம் சுமத்தியது போன்ற காரணங்களை எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அம்பலம்
எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் அளித்ததை அறிந்த சபாநாயகர் ஓம் பிர்லா, உடனடியாக பரிசீலனைக்கு எடுத்து உரிய முறையில் நடவடிக்கை எடுக்கும்படி, செகரட்டரி ஜெனரல் அலுவலகத்தை கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. நம்பிக்கையில்லா தீர்மானம் முடிவுக்கு வரும் வரை, லோக்சபாவுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா வர மாட்டார் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.
உணவு இடைவேளைக்கு பின், லோக்சபாவில் திட்டமிட்டபடி பட்ஜெட் மீதான விவாதம் துவங்கியது. பார்லி., உள்ளேயும், வெளியேயும் நடக்கும் ஆர்ப்பாட்டம், அமளி போன்றவற்றில் காங்கிரசுடன் சேர்ந்து, தி.மு.க., சமாஜ்வாதி, இடதுசாரிகள் போன்ற கட்சிகள் குரல் கொடுக்கின்றன.
ஆனால், துவக்கம் முதலே, திரிணமுல் காங்., மட்டும் காங்கிரசோடு சேராமல் தனித்தே செயல்படுகிறது. நம்பிக்கையில்லா தீர்மான விவகாரத்திலும் அக்கட்சி தனி ரூட்டில் பயணிக்கிறது.
இதன் மூலம், ‘இண்டி’ கூட்டணியின், ‘ஒற்றுமை’ மீண்டும் ஒரு முறை அம்பலமாகி உள்ளது. இதற்கிடையே, லோக்சபாவில் பட்ஜெட் மீதான விவாதத்தில், ராகுல் இன்று பேச உள்ளதாகக் கூறப்படுகிறது.
– நமது டில்லி நிருபர் –
