குவஹாத்தி: அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, முஸ்லிம்களை நோக்கி துப்பாக்கியால் சுடுவது போல வீடியோ வெளியான விவகாரத்தில், அம்மாநில பா.ஜ., மீது காங்., போலீசில் புகார் அளித்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
கடும் நடவடிக்கை
இங்கு மொத்தமுள்ள, 126 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் ஏப்ரலில், தமிழகத்துடன் சேர்த்து தேர்தல் நடக்கிறது. இதில், ஆளும் பா.ஜ., – எதிர்க்கட்சியான காங்., இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்து முதல்வரான ஹிமந்த பிஸ்வ சர்மா, நம் அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
மேலும், அசாமில் காங்கிரசின் முகமாக அறியப்படும் அக்கட்சி எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான கவுரவ் கோகோய்க்கு, பாக்., உடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றஞ்சாட்டி வருகிறார்.
கடந்த 7ல், முஸ்லிம்களை நோக்கி முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா துப்பாக்கியால் சுடுவது போன்ற வீடியோவை, ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில், அசாம் பா.ஜ., வெளியிட்டது. இதற்கு காங்., உட்பட அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இனப் படுகொலையை முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா துாண்டுவதாக, கவுரவ் கோகோய் குற்றஞ்சாட்டினார். பல்வேறு தரப்பினரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, சர்ச்சைக்குரிய வீடியோவை அசாம் பா.ஜ., நீக்கியது.
வலியுறுத்தல்
இதுகுறித்து கருத்து தெரிவித்த முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, ‘வீடியோ பற்றி எனக்கு எதுவும் தெரியாது. வழக்கு தொடர்ந்தால் என்னை கைது செய்யுங்கள்; சிறைக்கு செல்லவும் தயார். வங்கதேச ஊடுருவல்காரர்களுக்கு நான் எப்போதும் எதிரானவன். அதில் என்றும் உறுதியாக இருப்பேன்’ என்றார்.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய வீடியோ விவகாரத்தில், அசாம் பா.ஜ., மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காங்., – எம்.எல்.ஏ.,க்கள் சிபாமணி போரா, திகந்தா பர்மன் ஆகியோர், குவஹாத்தியில் உள்ள டிஸ்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.
