புதுடில்லி: ஐந்து மாநில சட்டசபை தேர்தலையொட்டி, சொந்த மாவட்டங்களில் பணியாற்றும் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யுமாறு, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேர்தல் கமிஷன் அறிவுறுத்திஉள்ளது.
தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, தலைமை தேர்தல் கமிஷன் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக சொந்த மாவட்டம், ஊர்களில் பணியாற்றும் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யுமாறு, அந்தந்த மாநில அரசுகளுக்கு தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.
தேர்தலுக்கு சம்பந்தம் இல்லாத அரசு டாக்டர்கள், இன்ஜினியர்கள், ஆசிரியர்கள் அல்லது தலைமை ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் அந்த உத்தரவில் தேர்தல் கமிஷன் தெளிவுபடுத்தியுள்ளது.
இதுகுறித்து ஐந்து மாநில தலைமை செயலர்களுக்கு தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், ‘தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் நீண்டகாலமாக சொந்த மாவட்டத்தில் பணியாற்றி வந்தால், அவர்களை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும்’ என அறிவுறுத்தியுள்ளது.
அதே சமயம், ‘தேர்தல் பணியில் தொய்வு ஏற்படுவதை தடுக்க, மண்டல அளவிலான அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை’ என தெரிவித்துள்ளது.
லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களின்போது, சொந்த ஊரில் பணியாற்றும் அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வது குறித்து தேர்தல் கமிஷன் அறிவுறுத்தல்கள் வழங்கும். அந்த வகையில், தேர்தல் நடக்கவுள்ள மாநில அரசுகளுக்கு இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
