ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக வேண்டும்; மகளிர் அணி ஆர்பாட்டத்தில் கஸ்தூரி ஆசை

கோவை: ”ஸ்டாலினை போன்ற திறமையான எதிர்கட்சி தலைவர் யாருமே இல்லை அவர் மீண்டும் எதிர்கட்சி தலைவராக வேண்டுமென ஆசைப்படுகிறேன்,” என்று நடிகை கஸ்துாரி பேசினார்.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளும் கொடுமைகளும் அதிகரித்து விட்டதை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சி மகளிர் அணியினர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் காந்தி பார்க்கில் நடந்தது. இதில் பா.ஜ.,மாநில செயற்குழு உறுப்பினர் நடிகை கஸ்தூரி பேசியதாவது:

அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்குபாதுகாப்பு இருந்தது. ஆனால் தற்போது கேள்விகுறியாகி விட்டது. பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் குற்றம் செய்தவர்கள் அப்போதே தண்டிக்கப்பட்டனர்.ஆனால் அண்ணா பல்கலை பாலியல் விவகாரத்துக்கு பதிலில்லை.

வேலியே பயிரை மேயும் அவலம் நடந்து கொண்டிருக்கிறது.

கஞ்சா விற்பவர்களை வேறு எங்கும் தேட வேண்டியதில்லை. அமைச்சர்களின் போட்டோ ஆல்பங்களை பார்த்தால் போதும். ஆதவ் அர்ஜுனாவும் தி.மு.க. கூட்டாளிதான்.

ஸ்டாலின் திறமையான எதிர்கட்சி தலைவராக செயல்பட்டார். அவரை போல யாருமே இல்லை. அந்த பதவிதான் அவருக்கு நல்ல பொருத்தம். அவர் எதிர்கட்சி தலைவர் ஆக வேண்டுமென ஆசைப்படுகிறேன்.

அ.தி.மு.க., ஆட்சியில் இரவு 10 மணிக்கு மேல் மது கிடைக்காது ஆனால் தற்போது, 24 மணி நேரமும் கிடைக்கிறது. கனிமொழி பல முறை பொய்மொழி ஆகிவிடுகிறார். அவர் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை சிறப்பாக செய்கிறார். தி.மு.க. அரசை ‘தீ’ என்று திருவள்ளுவர், அல்லல் பற்றும் ஆறாத என்ற குறளின் வாயிலாக குறிப்பிட்டுள்ளார்.நான் நடித்தது அமைதிப்படை, இங்கு இருப்பது மாபெரும் பெண்கள் படை.

கொடுமை கொடுமை என்று போலீஸ் நிலையம் சென்றால் அங்கொரு கொடுமை காத்துக் கொண்டிருக்கிறது. நல்ல ஆட்சி வேண்டுமென்றால் மத்தியில் தாமரை மலர வேண்டும், தமிழகத்தில் இரட்டை இலை வளர வேண்டும். தீய சக்தி தி.மு.க.வே போ… ஒழிந்து போ… என ஜபம் செய்யுங்கள். இவ்வாறு கஸ்தூரி பேசினார்.

பெத்த வயிறு பத்தி எரியுது – பொய்யா போச்சு, கொய்யா போச்சு …. கனிமொழி பேச்சு பொய்யா போச்சு என்று மகளிர் அணியினர் கோஷம் எழுப்பினர். திரளான மகளிர் பங்கேற்றனர்.

Source link