மேகதாது திட்டத்திற்கு விரைவாக அனுமதி: பிரதமர் மோடியிடம் சித்தராமையா நேரில் கோரிக்கை

பெங்களூரு,

கர்நாடகத்தில் நடந்த கோவில் திறப்பு விழா ஒன்றில் பங்கேற்பதற்காக நேற்று பிரதமர் மோடி சிறப்பு விமானத்தில் பெங்களூரு வந்தார். விமான நிலையத்தில் அவரை வரவேற்ற முதல்-மந் திரி சித்தராமையா கர்நாடக திட்டங்கள் தொடர்பான கோரிக்கை மனுவை பிரதமரிடம் வழங்கினார்.

குறிப்பாக அந்த கடிதத்தில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பெங்களூருவுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடாக ரூ.6 ஆயிரம் கோடி வழங்க வேண்டும். கர்நாடகத்தில் மேகதாது திட்டத்தை அமல்படுத்துகிறோம். இதற்கு விரைவாக அனுமதி வழங்க வேண்டும். இதுகுறித்து மத்திய நீர் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

அங்கு 67 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தேக்கும் வகையில் அணை கட்டப்படுகிறது. இது பெங்களூருவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய உதவும். மேலும் தமிழ்நாட்டுக்கும் குறித்த காலத்தில் தண்ணீர் திறக்க முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் கனகபுரா அருகே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கட்டப்பட உள்ளது. இதன் திட்ட மதிப்பு ரூ.15 ஆயிரம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அணை கட்டும் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துவதற்கான முன்னேற்பாட்டு பணியை கர்நாடக அரசு தீவி ரப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link