ஆட்சியில் பங்கு பிரச்னை அ.திமுக கூட்டணியில் இல்லை; இபிஎஸ்

சென்னை: ‘ஆட்சியில் பங்கு பிரச்னை, அதிமுக கூட்டணியில் இல்லை’ என, அக்கட்சியின் பொதுச்செயலர் இபிஎஸ் தெரிவித்தார்.

சென்னையில் தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: ஆட்சியில் பங்கு இல்லை என, முதல்வர் ஸ்டாலின் கூறியது, தி.மு.க.,வுக்கும், காங்கிரசுக்கும் உள்ள பிரச்னை. இந்த பிரச்னை, அதிமுக கூட்டணியில் இல்லை. ஆனால், ஸ்டாலின் கூறியதற்கு, காங்கிரஸ் எம்.பி., பதிலடி கொடுத்துள்ளார். தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் இருப்பதையே, இது காட்டுகிறது.

அ.தி.மு.க., தலைமையில் தான் கூட்டணி, பழனிசாமி தான் முதல்வர் என்பதை, உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவுப்படுத்தி விட்டார். அ.தி.மு.க., பெரும்பான்மையான இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். த.வெ.க., இதுவரை தேர்தலில் போட்டியிட்டதில்லை. எனவே, அக்கட்சியின் பலம் தெரியாது. திரைப்படத்தில் விஜய் சூப்பர் ஸ்டார். தேர்தலை சந்தித்த பின்னரே, அரசியலில் அவர் எப்படி என்பது தெரியும்.

த.வெ.க., – தி.மு.க., இடையேதான் போட்டி என, விஜய் கூறுவதை, நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. கடந்த 2024 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டது. பா.ஜ.,வுக்கு அடிமையாக இருந்திருந்தால், எப்படி தனித்து போட்டியிட்டிருக்க முடியும்? தமிழக அரசு சரியான திட்ட அறிக்கை கொடுக்காததால் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை. முதல்வர் ஸ்டாலினுடன் நேருக்கு நேர் விவாதத்திற்கு அழைப்பு விடுத்தும், ஸ்டாலின் அதை ஏற்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Source link