டாக்கா: வங்கதேசத்தில் இன்று (பிப்ரவரி 12) நடக்கும், 300 இடங்களுக்கான பொதுத்தேர்தல் முடிவுகள் மாலையே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், 2024ல் வெடித்த மாணவர் போராட்டத்தால் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. அங்கு ஜனநாயக ரீதியிலான தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு இன்று ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி போட்டியிடவில்லை.
சமீபத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான, வங்கதேச தேசியவாதக் கட்சி அடங்கிய, 10 கட்சிகள் கூட்டணி போட்டியிடுகிறது. இதேபோன்று ஜமாஅத் – இ – இஸ்லாமி தலைமையிலான கூட்டணியும் களத்தில் உள்ளது. போராட்டங்களை முன்னெடுத்த மாணவர் அமைப்பினரும் போட்டியிடுகின்றனர். தேர்தல் முடிவுகள் இன்று மாலை வெளியாகிறது.
