ஹிந்தியை கண்மூடித்தனமாக எதிர்க்கக் கூடாது; வெங்கையா நாயுடு

சென்னை: ‘ஹிந்தியை திணிக்கக் கூடாது. அதே நேரத்தில் ஹிந்தி மொழியை கண்மூடித்தனமாக எதிர்க்கவும் கூடாது,’என்று முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் தாய்மொழியின் முக்கியத்துவம் குறித்து அவர் பேசியதாவது; தமிழ் மிகவும் அழகான மொழி. ஒவ்வொருவரும் தங்களின் தாய் மொழியில் சிறந்து விளங்க வேண்டும். முதலில் உங்களின் தாய் மொழியில் பேச வேண்டும். அதன்பிறகு, பிற மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும். உங்களின் வீட்டில் உள்ளவர்களிடம், அண்டை வீட்டாரிடம் மற்றும் வெளியே செல்லும் இடங்களில் எல்லாம் உங்களின் தாய் மொழியில் தான் பேச வேண்டும். அப்போது, உங்களின் தாய் மொழிக்கு மரியாதையும், பாதுகாப்பும் கொடுக்க முடியும்.

அதேவேளையில், பிற மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும். நான் அந்நிய மொழியான ஆங்கிலத்துக்கு எதிரானவன் அல்ல. ஆங்கிலத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு முன்னதாக, இந்திய மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும். தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி என நாட்டில் ஏராளமான மொழிகள் உள்ளன.

நாம் ஹிந்தியை எதிர்க்க வேண்டும் என்ற கண்மூடித்தனமான எண்ணத்தில் இருக்கக் கூடாது. ஹிந்தி திணிக்கக் கூடாது தான். அதே சமயம் ஹிந்தியை எதிர்க்கவும் கூடாது. ஆரம்பத்தில் நான் ஹிந்தி கற்கவில்லை. பின்னர், நான் டில்லிக்குச் சென்றபோது, ஹிந்தியின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். ஏனென்றால் நீங்கள் ஒரு தேசிய அளவிலான தலைவராக விரும்பினாலோ, மற்ற மாநிலங்களில் பணியாற்ற விரும்பினாலோ, நீங்கள் ஹிந்தியையும் கற்க வேண்டும், என்றார்.

Source link