புதுடில்லி: லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய்களைப் பரப்புவதாக மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், சிவராஜ் சிங் சவுகான் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் இந்த ஒப்பந்தத்தின் கீழ், விவசாயிகள் நலன்கள் முழுமையாக பாதுகாக்கப்பட்டு உள்ளன என தெளிவுப்படுத்தினர்.
”காங்கிரசும், ஒட்டுமொத்த இந்தியாவும் உணவுப் பாதுகாப்புக்காகப் போராடியது. ஆனால், பிரதமர் மோடி விவசாயிகளையும், நமது உணவுப் பாதுகாப்பையும் ஏமாற்றிவிட்டார். அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ததன் மூலம், அவர் பருத்தி, சோயா, ஆப்பிள் மற்றும் பழ விவசாயிகளை விற்றுவிட்டார்” என காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், சிவராஜ் சிங் சவுகான் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது: ராகுல் பொய்களைப் பேசி உள்ளார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர் தனது போலி கதைகளால் நமது விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறார். நமது விவசாயிகளை தூண்டிவிட முயற்சிக்கிறார். அவர் நமது தமிழகத்தை பற்றி ஒருபோதும் அக்கறை கொள்ளவில்லை. அவர் இந்தியாவின் எதிர்காலத்திற்காக ஒருபோதும் பாடுபடுவார் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது.
விவசாயிகள் நலன்
கோதுமை, அரிசி, தினை, சோயாபீன்ஸ், சோளம், மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்கள், மசாலாப் பொருட்கள் மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட முக்கிய பயிர்கள் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன. ஆப்பிள் உள்ளிட்ட முக்கிய பழங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நலனையும் நாங்கள் முழுமையாகப் பாதுகாத்துள்ளோம்.
உண்மை என்னவென்றால், வர்த்தக ஒப்பந்தத்தின் விளைவாக, பாஸ்மதி அரிசி, பழங்கள், மசாலாப் பொருட்கள், தேயிலை மற்றும் கடல் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்கும். விவசாயிகளின் வருமானம் உயரும். பருத்தி, ஜவுளி ஏற்றுமதிக்கு பல வாய்ப்புகளை உருவாக்கி உள்ளோம்.
இது பருத்திக்கான தேவையை பன்மடங்கு அதிகரிக்கும், இது நமது பருத்தி விவசாயிகளுக்கு பயனளிக்கும்.
பிரதமர் மோடி எப்போதும் விவசாயிகள் மீது அக்கறை கொண்டவராக இருந்து வருகிறார். அவர்களின் செழிப்பை உறுதி செய்ய அனைத்து முடிவுகளையும் எடுத்துள்ளார். அமெரிக்காவுடனான சமீபத்திய வர்த்தக ஒப்பந்தத்தில், விவசாயிகளின் நலன் மிக முக்கியமானதாக கருதப்பட்டுள்ளது. இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.
ராகுல் பொய்யர்
வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது: ராகுல் ஒரு பொய்யர். அவருக்கும், நாட்டிற்கும், விவசாயிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. விவசாயிகளுக்கு அதிகாரமளிப்பதை அவர் விரும்பவில்லை. அவர் எப்போதும் தேச விரோத விஷயங்களைப் பேசுவதைக் காணலாம்.
பிரதமர் மோடி எப்போதும் விவசாயிகளின் நலனுக்காக ஒவ்வொரு முடிவை எடுத்து வருகிறார்.
அவரது தலைமையில் தொடங்கப்பட்ட திட்டங்கள் விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றியுள்ளன. அமெரிக்காவுடன் சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் விவசாயிகளின் நலன் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
