சென்னை: சட்டசபை தேர்தல் வர உள்ளதால், மகளிர் உரிமைத் தொகை பெறும் 1.31 கோடி மகளிரின் வங்கி கணக்கில், நேற்று காலை

சென்னை: சட்டசபை தேர்தல் வர உள்ளதால், மகளிர் உரிமைத் தொகை பெறும் 1.31 கோடி மகளிரின் வங்கி கணக்கில், நேற்று காலை திடீரென 5,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டது.

அடுத்து தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், 1,000 ரூபாய் உரிமைத்தொகை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

தமிழக மகளிருக்கு ஸ்டாலின் தந்த உறுதிமொழி தான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும், அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலை காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத் தொகையை முடக்க பார்க்கின்றனர்.

வாக்குறுதி முந்திக் கொண்டது தி.மு.க., அரசு. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன் பணமாக 3,000 ரூபாய்; கோடைக்கால சிறப்பு தொகுப்பாக 2,000 ரூபாய் என, 1.31 கோடி மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளுக்கும், காலை 5,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.

‘வெல்லும் தமிழ் பெண்கள்’ ஆதரவோடு, அடுத்தும் நாங்கள் தான் வெல்வோம். ‘தி.மு.க., அரசு 2.0’வில், 1,000 ரூபாய் உரிமைத் தொகையை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்குவோம். இது, என் சகோதரிகளுக்கு ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

அரசு சார்பில், 5,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சி பொறுப்பேற்ற போது, கொரோனா உச்சத்தில் இருந்தது. அதை சமாளித்து, மக்களின் உயிரை காத்தது மட்டுமல்ல; அவர்கள் வாழ்வாதாரத்தை காக்க, 4,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கினோம்.

கடந்த ஆட்சி விட்டுட்டு போன கடுமையான நிதி நெருக்கடியை சமாளித்து, ஆட்சிக்கு வந்ததுமே பல திட்டங்களை நிறைவேற்றினோம். ஆட்சிக்கு வருவதற்கு முன், ‘மாதம் 1,000 ரூபாய் உரி மைத்தொகை வழங்கப் படும்’ என அறிவித்தேன்; இது சாத்தியமே இல்லை என சிலர் கூறினர்.

ஆனாலும், நிதி நெருக்கடியை சமாளித்து, மத்திய அரசின் ஓரவஞ்சனையையும் மீறி, கடந்த 2023 செப்டம்பர் முதல், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.

உரிமைத் தொகை முதலில் 1.13 கோடி மகளிருக்கு பயனளித்த இத்திட்டம், சமீபத்தில் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது 1.31 கோடி குடும்ப தலைவியர் பயன் பெற்று வருகின்றனர்.

இது வெறும் நிதியுதவி அல்ல. சமூகத்தில் பெண்கள் ஆற்றும் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக கொடுக்கப்படுகிற உரிமைத் தொகை.

இந்த தொகையை வைத்து, அன்றாட வீட்டுச் செலவுகள், குடும்பத்தில் ஏற்படும் மருத்துவச் செலவுகள், குழந்தைகளுக்கான கல்விச் செலவுகள் என, பல அத்தியாவசிய செலவுகளை, மகளிர் தாங்களே நிறைவு செய்ய, இந்த திட்டம் வழிவகுத்தது.

அதனால் தான், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி என்பது, ஒவ்வொரு குடும்பத் தலைவியும் ஆவலோடு எதிர்பார்க்கும் நாளாக அமைந்துள்ளது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த திட்டத்தை, மற்ற மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன.

இந்த உரிமைத் தொகையை மேம்படுத்த வேண்டும் என நாம் செயல்பட்டு வந்ததால், அதற்கு எதிராக டில்லியில் இருக்கும் ஒரு கூட்டமும், தமிழகத்தில் அவர்களுக்கு அடிமையாக இருக்கும் இன்னொரு கூட்டமும், எதிர் வரும் சட்டசபை தேர்தலை காரணம் காட்டி, அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்த மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த, சூழ்ச்சி செய்வதாக தகவல் வருகிறது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும், சிலர் முயற்சி செய்வதாக செய்திகள் வருகின்றன.

மொத்தம் 1.31 கோடி மகளிர் உழைப்பை அங்கீகரிக்கும் இந்த திட்டத்தை, மூன்று மாதம் நிறுத்தி வைத்தால், நீங்கள் எவ்வளவு சிரமங்களுக்கு ஆளாவீர்கள் என, உங்கள் வீட்டில் ஒருவனாக இருக்கும் எனக்கு நன்றாக தெரியும்.

கடினமான கோடைக்காலத்தில் இந்த தொகை நிறுத்தப்பட்டால், உங்களுக்கு எவ்வளவு வலி ஏற்படும் என என்னால் உணர முடிகிறது. உங்கள் மாதாந்திர செலவை எப்படி சமாளிப்பீர்கள்?

உங்கள் குடும்பத்தில் நோயால் பாதிக்கப்பட்டோருக்கு, மாத்திரை வாங்கி கொடுக்க முடியுமா? குழந்தைகள் தேர்வு எழுதும் காலத்தில், அவர்களுக்கு உணவு கொடுப்பதில் இருந்து, தேவையான கல்வி செலவுகளை செய்ய முடியுமா? இந்த கஷ்டத்தை எல்லாம் நினைத்து பார்த்து தான், ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளேன்.

அதன்படி இந்த பிப்ரவரி மாதம் மட்டுமில்லாமல், அடுத்த இரண்டு மாதம், அதாவது மார்ச், ஏப்ரலுக்கான உரிமைத் தொகை தவணைகளையும் சேர்த்து 3,000 ரூபாய்; கூடுதலாக கோடைக்கால செலவுகளை கருத்தில் வைத்து, மேலும் 2,000 ரூபாய் சிறப்புத் தொகை சேர்த்து, இந்த பிப்ரவரி மாதம் 5,000 ரூபாயை, சிறப்பு மகளிர் உரிமைத் தொகையாக, 1.31 கோடி பெண்களுக்கு வழங்க உத்தரவிட்டு உள்ளேன்.

இந்த 5,000 ரூபாயை அடுத்த மூன்று மாதங்களுக்கு, நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால், கொஞ்சம் கவனமாக செலவிடுங்கள்; முடிந்த அளவுக்கு சேமிக்கவும் பாருங்கள்.

அன்பு சகோதரிகளே, உங்கள் ஆதரவோடு அடுத்து அமையப்போவதும் திராவிட மாடல் ஆட்சி தான். அதனால், நீங்கள் மனம் குளிரும் சிறப்பான ஒரு அறிவிப்பை, இந்த நேரத்தில் சொல்ல விரும்புகிறேன்.

அடுத்த திராவிட மாடல் 2.0 ஆட்சி காலத்தில், உங்களின் உரிமைத்தொகை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இது, ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி. இதையும் எப்படி செய்வோம் என சிலர் கேட்கலாம்.

கடந்த ஆட்சியின் 10 ஆண்டுகளில், தமிழகம் அடைய முடியாத பொருளாதார வளர்ச்சியை, இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு சாதித்துக் காட்டியவர்கள் நாங்கள். அதனால், எந்த தடை வந்தாலும், அதையெல்லாம் தாண்டி, தமிழகமே வெல்வோம் ஒன்றாக. இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

ரூ.6,534.92 கோடி தமிழகத்தில் 1 கோடியே 30 லட்சத்து 69,831 மகளிருக்கு, மாதந்தோறும் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. அவர்களின் வங்கி கணக்கில் நேற்று, தலா 5,000 ரூபாய் வீதம் மொத்தம் 6,534 கோடியே 91 லட்சத்து 55,000 ரூபாய் அரசு பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. ***

Source link