ஆயுட்காலம் முடிந்த வாகனங்கள் பறிமுதல் டில்லி அரசு அதிரடி அறிவிப்பு

புதுடில்லி: ஆயுட்காலம் முடிந்த வாகனங்களை பறிமுதல் செய்ய டில்லி அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, டில்லி அரசின் போக்குவரத்துத் துறை நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தலைநகர் டில்லியில் காற்று மாசுபாடு கட்டுப்பட்டு விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு நடவடிக்கையாக, டில்லியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மற்றும் சாலையில் இயக்கப்படும் ஆயுட்காலம் முடிந்த வாகனங்களை பறிமுதல் செய்யப்படும்.

10 ஆண்டுகள் பத்து ஆண்டுகளுக்கும் மேலான டீசலில் இயங்கும் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோலில் இயங்கும் வாகனங்கள் ஆயுட்காலம் நிறைவடைந்ததாக நிர்ணயிக்கபட்டுள்ளது.

ஆயுட்காலம் நிறைவடைந்த வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களுக்கு தடையில்லா சான்றிதழ் பெற்று, வாகனங்களை டில்லி மாநகருக்கு வெளியே எடுத்துச் செல்லலாம். டில்லி மாநகர் மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் ஆயுட்காலம் முடிந்த வாகனங்களை இயக்க அனுமதி கிடையாது.

டில்லி மாநகரில் பொது இடங்களில் இயங்கும் அல்லது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, ‘பாரத் ஸ்டேஜ் -3’ மற்றும் அதற்கும் குறைவான தரம் கொண்ட வாகனங்கள், முன்அறிவிப்பு இல்லாமல் பறிமுதல் செய்யப்படும். இந்த நடவடிக்கை விரைவில் துவங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அறிவியல்பூர்வ திட்டம் புதுடில்லி சர்வதேச விமான நிலையத்தில், 120 தண்ணீர் தெளிப்பு இயந்திரங்களை நேற்று துவக்கி வைத்து முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது:

காற்று மாசை கட்டுப்படுத்தவும், சுத்தமான மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் டில்லி சர்வதேச விமான நிலையத்தில், டில்லி சர்வதேச விமான நிலைய நிறுவனம் மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் இணைந்து தண்ணீர் தெளிப்பான்களை நிறுவியுள்ளன.

காற்று மாசை கட்டுப்படுத்த குறுகிய, இடைக்கால மற்றும் நீண்ட கால திட்டங்களை அறிவியல் பூர்வமாக டில்லி அரசு செயல்படுத்தி வருகிறது.

டில்லி மாநகரின் முக்கியச் சாலைகள் மற்றும் 143 உயர்நிலை மெட்ரோ ரயில் நிலையங்களிலும் காற்று மாசை கட்டுப்படுத்தும் தண்ணீர் தெளிப்பான்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், நிகழ்நேர கண்காணிப்பு கருவிகள், 46 மெட்ரோ ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

நாட்டிலேயே எந்த நகரத்திலும் இதுபோன்ற காற்று மாசு கட்டுப்பாட்டு அமைப்புகள் இல்லை. விமான நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் தெளிப்பான்களின் எண்ணிக்கை 600 ஆக அதிகரிக்கப்படும்.

வரும், 2029ம் ஆண்டுக் குள் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் அனைத்து பஸ்களும் மின்சார வாகனங்களாக மாற்றப்படும். மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் அதிகரிக்கப்படும். கட்டுமான தளங்களில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் தூசு கண்காணிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Source link