பயங்கரவாதத்தை வேரறுப்பதே கடமை: சி.ஆர்.பி.எப்., இயக்குநர் ஜெனரல் உறுதி

புல்வாமா: ”பயங்கரவாதத்தை வேரறுப்பதே எங்களின் கடமை. அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் ஒழிப்பதில் உறுதியாக இருக்கிறோம்,” என, சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை இயக்குநர் ஜெனரல் ஞானேந்திர பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 பிப்., 14ல், ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீநகர் – -ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது, ஜெய்ஷ்- – இ – -முகமது பயங்கரவாதி வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை மோதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினார்.

இதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதன் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, புல்வாமாவில், வீரமரணமடைந்த தியாகிகளுக்கு, சி.ஆர்.பி.எப்., இயக்குநர் ஜெனரல் ஞானேந்திர பிரதாப் சிங் மலர் துாவி மரியாதை செலுத்தினார்.

பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க வேண்டிய கடமை சி.ஆர்.பி.எப்.,-க்கு உள்ளது. அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் ஒழிப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். வீரமரணம் அடைந்த தியாகிகளின் குடும்பங்களுக்கு, சி.ஆர்.பி.எப்., எப்போதும் துணை நிற்கும்.

இதுவரை 19 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. தியாகிகளின் குழந்தைகள ் கல்விச் செலவு முழுதையும் சி.ஆர்.பி.எப்., ஏற்றுள்ளது. குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களானதும், அவர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும்.

தியாகிகளின் குடும்பங்களின் குறைகளைக் கேட்டறியவும், அவர்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கவும் ‘வீர் பரிவார்’ செயலி துவங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link