மும்பை: "இரவில் கடை அடைத்த பிறகு கஷ்டப்படுகிறார்கள்" – வைரலாகும் தானியங்கி சிகரெட் வழங்கும் மெஷின்

மும்பை அருகில் நிறுவப்பட்டுள்ள சிக்ரெட் தானியங்கி மெஷின் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சிகரெட் தானியங்கி மெஷின்

மும்பையைச் சேர்ந்த ஒருவர் தானியங்கி சிகரெட் வழங்கும் இயந்திரத்தைத் தனது கடைக்கு வெளியில் நிறுவி இருக்கிறார்.

மும்பை அருகில் உள்ள ஷாப்பூர் என்ற இடத்தில் இந்த மெஷின் அமைக்கப்பட்டுள்ளது. அதனைப் பார்த்து ஆச்சரியப்பட்ட ஆதித்யா என்பவரும் அவரது நண்பர்களும் அதனைச் சோதித்துப் பார்க்க விரும்பினர்.

தானியங்கி மெஷினில் எந்தச் சிகரெட் என்ன விலை என்று தெளிவாக எழுதப்பட்டு இருந்தன. உடனே அதனைச் சோதித்துப் பார்க்க விரும்பிய ஆதித்யா, அதில் தான் விரும்பும் ஒரு சிகரெட் பட்டனை அழுத்தினார்.

உடனே யு.பி.ஐ. மூலம் பணம் கேட்கிறது. அதில் பணத்தைச் செலுத்தியவுடன் உள்ளே இருந்து மிகவும் அழகாக ஒரு சிகரெட் வெளியில் வருகிறது. அதனை ஆதித்யா ஒரு வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு அந்த மெஷினில் ஹெல்ப்லைன் நம்பர் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அந்த நம்பருக்கு போன் செய்தபோது அந்த மெஷின் கணேஷ் ஜாதவ் மற்றும் சூரஜ் ஆகியோருக்குச் சொந்தமானது என்று தெரிய வந்தது. அவர்கள் இரண்டு பேரும் உள்ளூர் பொறியாளர்கள் சிலரின் துணையோடு இந்த மெஷினை வடிவமைத்ததாகத் தெரிவித்தனர்.

இது போன்ற வேறு சில பொருள்களையும் தானியங்கி முறையில் வழங்கக்கூடிய மெஷின்களைத் தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாக அவர்கள் இரண்டு பேரும் தெரிவித்தனர்.

சிகரெட்
சிகரெட்
pixabay

சிகரெட் தானியங்கி மெஷின் தயாரிக்க காரணம் என்ன என்று கேட்டதற்கு, “‘இந்தப் பகுதியில் புகைப்பிடிப்பவர்கள் அதிகம். இரவு 10 மணிக்கு மேல் எங்கள் கிராமத்தில் கடைகளை அடைத்துவிடுகின்றனர். இதனால் 4 முதல் 5 கிலோமீட்டருக்கு சிகரெட் தேடி அலைகின்றனர்.

ஒருமுறை, கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பேர், சிகரெட் வாங்கச் சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு எளிதாகவும் பாதுகாப்பாகவும் இருக்க, நான் முடிவு செய்தேன். ஒரு சில பொறியாளர்களின் உதவியுடன் இந்த இயந்திரத்தை உருவாக்குகினோம்” என்று தெரிவித்தார்.

Source link