சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: 9 நீதிபதிகள் அமர்வு விசாரணை

புதுடில்லி: சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து கடந்த 2018ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரான, மறுசீராய்வு மனுக்களை 9 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 முதல் 50 வயதுள்ள பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் கடந்த 2018 ம் ஆண்டு சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது.இத்தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மற்றும் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (பிப்ரவரி 16) தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி மற்றும் விபுல் பஞ்சோலி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் இந்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டின் 9 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என தெரிவித்தனர்.

மேலும் 9 பேர் கொண்ட அமர்வை தலைமை நீதிபதி அமைப்பார். விசாரணை ஏப்., 7 காலை 10:30 மணிக்கு துவங்கும். மறுசீராய்னு மனுவுக்கு ஆதரவான வாதங்களை ஏப்ரல் 7 முதல் 9 ம் தேதி வரையிலும், எதிர்ப்பவர்கள் ஏப்ரல் 14 முதல் 16 வரையிலும் வைக்கலாம்.

சம்பந்தப்பட்டவர்கள், மார்ச் 14க்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும். அனைத்து தரப்பு வாதங்களும் ஏப்ரல் 22 ல் முடிவடையும் என தெரிவித்தனர்.

மத்திய அரசு ஆதரிக்கிறது

இந்த வழக்கில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட ரிட் மனுக்களை மத்திய அரசு ஆதரிக்கிறது எனத் தெரிவித்தார்.

Source link