ஏ. ஐ., தொடர்பான கவலை காரணமாக, தொடர்ச்சியாக கடந்த மூன்று வர்த்தக நாட்கள் சரிவைக் கண்ட இந்திய ஐ.டி., நிறுவனங்களின் பங்குகள், நேற்று சிறிய உயர்வுடன் நிலைபெற்றன. கடந்த வாரத்தில் மூன்று நாட்கள் சேர்த்து, கிட்டத்தட்ட 9.40 சதவீதம் சரிவை பதிவு செய்திருந்தது. இந்த மாத துவக்கத்தில் இருந்து கிட்டத்தட்ட 14.70 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது.
நிப்டி, சென்செக்ஸ் குறியீடுகளில் தலா 10 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பைக் கொண்டுள்ள ஐ.டி., துறையில் ஏற்பட்டுள்ள சரிவு, ஒட்டுமொத்த இந்தியப் பங்குச்சந்தையிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போதைய சரிவால், ஐ.டி., நிறுவனங்களின் பங்குகளில் 10 முதல் 25 சதவீதம் அளவுக்கு முதலீடு செய்துள்ள இந்தியாவின் முன்னணி மியூச்சுவல் பண்டுகளின் லாபம் குறைய வாய்ப்பு அதிகரித்து உள்ளது.
இது, மியூச்சுவல் பண்டு வாயிலாக முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, மியூச்சுவல் பண்டு நிபுணர் பி.பத்மநாபன் தெரிவித்ததாவது:
“கடந்த 5 ஆண்டுகளில், ஐ.டி., நிறுவனப் பங்குகள் எதிர்பார்த்த அளவுக்கு லாபத்தை தராத நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றன. இதற்கு பிறகு, அதிகபட்சமாக 10 சதவீதம் சரியலாம். போட்டிகள் அதிகரித்தாலும்கூட, அதற்குமேல் சரிவதற்கு வாய்ப்புகள் குறைவு.
மேலும், நல்ல ஐ.டி., நிறுவனங்களின் பங்கு விலை இப்போது மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. டி.சி.எஸ்., இன்போசிஸ்., ஹெச்.சி.எல்., போன்ற வலுவான நிறுவனங்களை உள்ளடக்கிய பண்டுகளை தாராளமாக தேர்வு செய்யலாம்.
மொத்தமாக முதலீடு செய்யாமல், எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு செய்வதன் மூலம் சந்தை சரிந்தாலும் சராசரி விலையில் அதிக யூனிட்களை ப் பெற முடியும். அதனால், சிறு முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, சரியான ஐ.டி., துறை சார்ந்த மியூச்சுவல் பண்டுகளை தேர்வு செய்து முதலீட்டை ஆரம்பிக்கலாம்.
