சென்னை: கூட்டணிக்கட்சிகளை பற்றி பொதுவெளியில் விமர்சிக்க அல்லது கருத்து தெரிவிக்க எந்த காங்கிரஸ்

சென்னை: கூட்டணிக்கட்சிகளை பற்றி பொதுவெளியில் விமர்சிக்க அல்லது கருத்து தெரிவிக்க எந்த காங்கிரஸ் பிரமுகர்களுக்கும் உரிமை இல்லை. டில்லி தலைமைக்கு மட்டுமே இதுபற்றி பேச அதிகாரம் உண்டு என்று காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

தமிழகம் வந்துள்ள கே.சி. வேணுகோபால் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசினால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் கே.சி.வேணுகோபால் நிருபர்களிடம் பேசியதாவது;

திமுக எங்களின் பழைய கூட்டாளி. காங்கிரஸ் பிரமுகர்கள் கருத்து எங்கள் கருத்தல்ல. கூட்டணி ஆட்சி குறித்து தெளிவான, தீர்க்கமான பேச்சுவார்த்தை அவசியம். கூட்டணி குறித்து யாரேனும் கருத்துகள் கூறினால் அது அவர்களின் சொந்த கருத்து. கூ.ட்டணிக்கட்சிகளுக்கு ஆதரவாகவோ, எதிராக பேசக்கூடாது என்று கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.

பார்லிமெண்ட் தேர்தலை போல, தமிழக சட்டசபை தேர்தலில் எங்களின் கூட்டணி தொடர்கிறது. ஆட்சியில் பங்கு என்பது கட்சியின் நிலைப்பாடு அல்ல. அது தனிநபரின் நிலைப்பாடுதான். மதவாத சக்திகளை எதிர்ப்பதில் காங்கிரஸ், திமுக தயாராக உள்ளது. திமுகவுடன் சேர்ந்து வகுப்புவாத சக்திகளை முறியடிப்போம்.

தவெகவுடன் கூட்டணியா என்று கேட்கிறீர்கள்? உங்கள் யூகங்களுக்கு எல்லாம் பதிலளிக்க முடியாது. பேச்சுவார்த்தைக்கு திமுக அழைக்கும் என்று காத்துக் கொண்டு இருக்கிறோம். திமுக, காங்கிரஸ் கூட்டணி குறித்து யாரும் பொதுவெளியில் பேசக்கூடாது.

இவ்வாறு கே.சி. வேணுகோபால் கூறினார்.

Source link