A.R.Rahman: “ஒரே ஒரு ரீல்ஸ்ல ஆரம்பிச்சது…" – ஏ.ஆர்.ரஹ்மான் கான்சர்ட்டில் பாடியது குறித்து அலெக்ஸ்

ஏ.ஆர்.ரஹ்மான் கான்சர்ட்டில் பாடல் பாடிய அலெக்ஸ் பதிவு வைரலாகியிருக்கிறது.

அலெக்ஸாண்டர்

சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில், A.R. ரஹ்மானின் “The Wonderment Tour” என்ற கான்சர்ட், பிப்ரவரி 14 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 40,000 பேர் வரை கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரபல நகைச்சுவை கலைஞர் அலெக்சாண்டர் பாபு (Alex in Wonderland), இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் `ராசாத்தி” பாடலைப் பாடினார். அந்த அனுபவத்தை நெகிழ்ச்சியாக தன் ரசிகர்கர்களிடம் பகிர்ந்துள்ளார்.

அலெக்ஸாண்டர்
அலெக்ஸாண்டர்

இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “கடந்த சில வாரங்களில் நடந்தவற்றை எப்போதும் மறக்கமுடியாது. எல்லாம் A. R. ரஹ்மான் என் ரீல்ஸ் ஒன்றை ஷேர் செய்ததிலிருந்து தொடங்கியது. எல்லாம் ஒரு சிறிய இன்ஸ்டாகிராம் ரீல்ஸிலிருந்து தொடங்கியது. ‘அலெக்ஸ் இன் வொண்டர்லேண்ட்’ நிகழ்ச்சியில் ரஹ்மான் குறித்து நான் பேசிய ஒரு பகுதியை அவரே தனது பக்கத்தில் பகிர்ந்தார். அதுவே எனக்குப் பெரிய விஷயமாக இருந்தது. ஆனால், அடுத்த சில நாட்களில் அவர் என்னை ‘பாலோ’ (Follow) செய்ததுடன், அவரை நேர்காணல் செய்யும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.

நேர்காணலுக்குக் காத்திருந்த போது, ஏ.ஆர்.ரஹ்மான் எதேச்சையாக என்னைப் பார்த்து “ஹாய்” என்று பல ஆண்டுகால நண்பரைப் போலக் கூப்பிட்டது மெய்சிலிர்க்க வைத்தது. நேர்காணலின் போது பலமுறை ஆனந்தக் கண்ணீர் வந்தது. அதைத் தட்டுத்தடுமாறி கட்டுப்படுத்திக்கொண்டேன்.

நேர்காணலின் இறுதியில் ஏ.ஆர். ரஹ்மான் கேட்ட அந்த ஒரு கேள்வி உலுக்கியது:

ஏ.ஆர்.ரஹ்மான்: “பிப்ரவரி 14-ம் தேதி ஃப்ரீயா இருக்கீங்களா? வந்து ஏதாவது பாடுறீங்களா?”

அலெக்ஸ்: “என்னது?”

ஏ.ஆர்.ரஹ்மான் (தனது குழுவிடம்): “அலெக்ஸ்க்கு ஒரு பாடல் கொடுங்கப்பா. ‘ராசாத்தி’ பாடல் பாடுறீங்களா?”

பிப்ரவரி 14-ம் தேதி நடந்த இசை நிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகையில், ரஹ்மான் காட்டிய அக்கறை நெகிழ்ச்சியடையச் செய்தது. நேரம் குறைவாக இருந்ததால் சில பாடல்களை நீக்க வேண்டிய சூழல் இருந்தது. என்னை மிக எளிதாகத் தவிர்த்திருக்கலாம். ஆனால், நான் மேடையில் ஆசுவாசமாக உணர வேண்டும் என்பதற்காக எனக்காக மூன்று முறை என்னுடன் அமர்ந்து ஒத்திகை பார்த்தார். அங்கு வந்திருந்த மற்றவர்கள் அனைவரும் அனுபவம் வாய்ந்த கலைஞர்கள், ஆனால் எனக்கு அவர் கொடுத்த அந்த முக்கியத்துவம் பெரியது.

பிப்ரவரி 14 அன்று அந்த மைதானமே அன்பால் நிறைந்திருந்தது. எனது பாடலை நீங்கள் அனைவரும் கொண்டாடிய விதம், ஏ.ஆர்.ரஹ்மான் என்ற மனிதரின் அன்பின் நீட்சியாகவே எனக்குத் தெரிந்தது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link