உலகில் ஏஐ உடைய அசுர வளர்ச்சி ஆக்கப்பூர்வமாகவும் அதே நேரம் அபாயகரமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஏஐ ஆல் ஆயிரக்கணக்கானோர் வேலையிழப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
தொழில்நுட்பம் மனித வாழ்வின் மீது ஆதிக்கம் செலுத்தும் காலத்தை நோக்கி மனித இனம் செல்கிறது என்ற அச்சமும் நிலவுகிறது.
தொழில்நுட்பம் வளர்ச்சி போர்வையில் பெரு நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை அன்றாட மனித வாழ்வில் திணிப்பதாக ஒரு சாரார் கருதுகின்றனர்.
ஏஐ மக்களுக்கு பயன்படுகிறதா அல்ல, மக்கள் ஏஐக்கு பயன்படுதுகின்றனரா என்ற சிக்கலும் இதில் உள்ளது.
இதற்கிடையே ஓபன் ஏஐ போன்ற பெருநிறுவனங்கள் மக்களை கண்காணிக்கவும், எதிரியை கண்டறிந்து கொல்லவும் ராணுவத்துக்கு தங்கள் தொழில்நுட்பத்தை வழங்கத் தொடங்கியுள்ளனர்.
இதுதொடர்பாக ஓபன்ஏஐ அண்மையில் அமெரிக்க ராணுவத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தம் சர்ச்சையாகியது.
இந்நிலையில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ-யின் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேனின் இல்லத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 4:12 மணியளவில், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அவரது இல்லத்தின் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசியுள்ளார்.
இந்தத் தாக்குதலால் வீட்டின் பிரதான நுழைவாயிலில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும், காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக, இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தாக்குதல் நடந்த நேரத்தில் ஆல்ட்மேன் வீட்டில் இருந்தாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில், 20 வயது இளைஞர் ஒருவர் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டு காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு எதிரான நிலைப்பாட்டின் காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதா? அல்லது தனிப்பட்ட காரணங்கள் ஏதேனும் இருந்தனவா? விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நகரத்தின் மையப்பகுதியில் உள்ள பிரதான ஏஐ நிறுவனத்தின் சிஇஓ இல்லத்தில் இத்தகைய தாக்குதல் நடந்திருப்பது, சிலிக்கான் பள்ளத்தாக்கில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
