டெல்லியில் நடைபெறும் AI மாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் அணியினர் போராட்டம் நடத்தியது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பறைசாற்றும் வகையில் டெல்லியில் “இந்திய AI உச்சிமாநாடு 2026′ (India AI Impact Summit) நடைபெற்றுவருகிறது. இந்த மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள், டெலிகேஷன்கள், பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சட்டையைக் கழற்றி பிரதமர் மோடிக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மாநாட்டின் ஒரு பகுதியில் உலகளாவிய சிஇஓ-க்கள் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்த ஒரு குழுவினர் தங்கள் சட்டைகளைக் கழற்றி கையில் ஏந்தியபடி முழக்கமிட்டவாறு அரங்கிற்குள் நுழைந்தனர். அவர்களின் முழக்கத்தில், அமெரிக்காவுடனான புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியாவுக்குப் போதிய பலன்கள் கிடைக்கவில்லை என்றும், இது நாட்டுக்கு எதிரானது என்றும் கோஷமிட்டனர். இந்த உயர்மட்ட பாதுகாப்பு வளையத்தை மீறி, அவர்கள் கியூஆர் (QR) கோடுகளைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்தது பாதுகாப்புப் பிரிவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தப் போராட்டம் தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் தேசியச் செயலாளர் கிருஷ்ணா ஹரி, பீகார் மாநிலச் செயலாளர் குந்தன் யாதவ், உபி மாநிலத் துணைத் தலைவர் அஜய் குமார், தேசிய ஒருங்கிணைப்பாளர் நரசிம்ம யாதவ் ஆகிய நான்கு முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் முதலில் கருப்பு குடைகளில் ஸ்டிக்கர் ஒட்டி, அரங்குக்குள் நுழையத் திட்டமிட்டதாகவும், பாதுகாப்பு காரணங்களால் குடைகள் பறிமுதல் செய்யப்படும் என்பதால், சட்டையில் ஸ்டிக்கர் ஒட்டி வந்து பின்னர் அதைக் கழற்றிப் போராடியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்திற்கு மத்திய அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், “இந்தியா உலகளாவிய தொழில்நுட்ப சக்தியாக உருவெடுக்கும் வேளையில், காங்கிரஸ் நாட்டை அவமானப்படுத்துகிறது. இது அரசியல் எதிர்ப்பு அல்ல, இந்தியாவின் பிம்பத்தைச் சிதைக்கும் சதி.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “நாடு முன்னேறிச் செல்லும் இந்த நேரத்தில் அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும். இளைஞர் காங்கிரஸின் செயல் கண்டிக்கத்தக்கது.” எனத் தெரிவித்திருக்கிறார்.
