புதுச்சேரி:
பிரதமர் மோடி வருகிற 3-ந்தேதி புதுவைக்கு வருகிறார். அவர் வருகையை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. பிரதமர் வருகை காலத்தில் புதுவையை டிரோன்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட மண்டலம் என அறிவிக்க காவல் கண்காணிப்பாளர் கோரிக்கை வைத்தார்.
இதையேற்று புதுவை கலெக்டர் குலோத்துங்கன், பிரதமர் வருகையொட்டி பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், டிரோன் கேமராக்கள் மற்றும் ஆளில்லா வான்வழி கருவிகள் புதுவையில் பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும், டிரோன்கள், பலூன்கள் போன்றவற்றின் மூலம் எந்தவிதமான வான்வழி புகைப்படம் அல்லது வீடியோ பதிவு மேற்கொள்ளவும் தடை செய்யப்படுகிறது.
மேலும் பிரதமர் 3-ந்தேதி புதுவை வருகையில் பலத்த பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், புதுவை மற்றும் உழவர்கரை நகராட்சி பகுதிகள் டிரோன்கள் பறக்கத் தடைசெய்யப்பட்ட மண்டலம் என்று அறிவிக்கப்படுகிறது என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
