கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான தி.மு.க-வின் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி நீடிக்கிறது. பேச்சுவார்த்தை சுமூகமாக செல்லவில்லை எனவும் தி.மு.க இறங்கி வர மறுக்கிறது என குமுறுகிறார்கள் தோழர்கள். இதுகுறித்து விரிவாக விசாரித்தோம்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காங்கிரஸுடனான கடும் இழுபறிக்கு பிறகு 28 தொகுதிகளையும் ஒரு ராஜ்ய சபா சீட்டையும் ஒதுக்கியது தி.மு.க. அதைதொடர்ந்து “எங்களுக்குள் கூடுதல் தொகுதிகள் வேண்டும்’ என கச்சைக்கட்டத் தொடங்கினார்கள் இதர கூட்டணிக் கட்சிகள்.

தொகுதி பங்கீடு குறித்து நம்மிடம் பேசிய சி.பி.ஐ, சி.பி.எம் நிர்வாகிகள், “இந்த தேர்தலில் எப்படியாவது கூடுதல் தொகுதிகளை பெற்றுவிட வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்தோம். ஆனால், முதற்கட்ட பேச்சுவார்த்தையின்போதே தொகுதிகள் குறைக்கப்படும் என்பதை நாசுக்காக சொல்லிவிட்டது தி.மு.க பேச்சுவார்த்தை குழு. ஆரம்பத்தில் இப்படித்தான் பேசுவார்கள், எப்படியும் கூடுதல் தொகுதிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் தி.மு.க தனது கறார் தன்மையிலிருந்து இறங்கிவரவில்லை” என்றனர்.
