பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் தனியார் துறை ஊழியர்களுக்கு மிக முக்கியமான அப்டேட் உள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டம், 2026′-ன் கீழ் பிஎஃப் பணத்தை எடுப்பதற்கான விதிகளில் அரசு ஒரு முக்கிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. புதிய விதிமுறையின்படி, பணியில் இருக்கும்போதே ஒரு ஊழியர் தனது பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுத்தால், கணக்கில் உள்ள மொத்தத் தொகையில் குறைந்தது 25 சதவீதத்தை அப்படியே வைத்திருக்க வேண்டும். அதாவது, ஊழியர்களால் இனி தங்கள் பிஎஃப் கணக்கில் உள்ள முழுத் தொகையையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியாது.
இந்த புதிய விதிமுறை ‘சமூகப் பாதுகாப்புச் சட்டம், 2020’-ன் கீழ் செயல்படுத்தப்படும் EPF திட்டம் 2026-ன் ஒரு பகுதியாகும். பணியில் இருக்கும்போது அடிக்கடி பிஎஃப் பணம் எடுப்பதால் எதிர்காலச் சேமிப்பு முழுமையாகக் கரைந்துவிடாமல் இருக்கவும், ஊழியர்களின் ஓய்வுக்காலச் சேமிப்பைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
ஊழியர்கள் இவ்வளவு தொகையை எடுக்கலாம்!
புதிய திட்டத்தில் இரண்டு புதிய விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன. முதலாவது குறைந்தபட்ச இருப்பு (Minimum Balance) ஆகும். அதாவது, ஊழியர் மற்றும் நிறுவனம் செலுத்திய பங்களிப்புகள் மற்றும் வட்டி உட்பட ஊழியரின் பிஎஃப் கணக்கில் உள்ள மொத்தத் தொகையில் 25 சதவீதம் எப்போதும் கணக்கிலேயே இருக்க வேண்டும். இரண்டாவது தகுதியுள்ள உறுப்பினரின் இருப்பு (Eligible Member Balance) ஆகும். அதாவது, 25 சதவீதத்தை தனியாக ஒதுக்கிய பிறகு மீதமுள்ள தொகையே தேவைப்பட்டால் ஊழியர் திரும்பப் பெறக்கூடிய தொகையாக இருக்கும்.
உதாரணமாக, ஒரு ஊழியரின் பிஎஃப் கணக்கில் ரூ. 10 லட்சம் இருந்தால், அந்த இருப்பில் ரூ. 2.5 லட்சத்தை (25%) அவர் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அத்தகைய சூழலில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு நிர்ணயித்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு, அந்த ஊழியரால் அதிகபட்சமாக ரூ. 7.5 லட்சம் வரை மட்டுமே எடுக்க முடியும். இருப்பினும், இந்த விதிமுறை பணிபுரியும் காலத்தில் செய்யப்படும் பகுதி அளவு வித்டிராவல்களுக்கு மட்டுமே பொருந்தும். ஒரு ஊழியர் பணி ஓய்வு பெறுதல், குறிப்பிட்ட வயதை அடைதல், நிரந்தர உடல் ஊனம் அடைதல் அல்லது முழுமையான பிஎஃப் தொகையை எடுக்க அனுமதிக்கப்படும் பிற சூழல்களில், அவர் தனது கணக்கில் உள்ள முழுத் தொகையையும் எடுக்க முடியும். அத்தகைய சூழல்களில், 25 சதவீத இருப்பை வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை பொருந்தாது.
ஊழியர்களுக்கு இதனால் என்ன நன்மை கிடைக்கும்?
புதிய பிஎஃப் திட்டத்தில் பணம் எடுக்கும் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது. முன்பு பல்வேறு தேவைகளுக்கு வெவ்வேறு விதிகள் பின்பற்றப்பட்டன. ஆனால் இப்போது மருத்துவச் சிகிச்சை, குழந்தைகளின் கல்வி, திருமணம் மற்றும் வீடு வாங்குதல் அல்லது கட்டுதல் போன்ற தேவைகளுக்கு பணம் எடுக்கும் விதிகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்த பிறகு ஊழியர்கள் தங்கள் கணக்கு இருப்பிலிருந்து இத்தேவைகளுக்காகப் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும்.
இந்த மாற்றம் நீண்ட கால அடிப்படையில் ஊழியர்களுக்குப் பயனுள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அவர்கள் பணி ஓய்வின் போது போதுமான சேமிப்பைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதோடு, மீதமுள்ள இருப்புத் தொகைக்குத் தொடர்ந்து வட்டியையும் பெற வழிவகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
