உத்தரப் பிரதேச மாநிலத்தில் ராணி லட்சுமிபாய் ஸ்கூட்டி திட்டம் மூலம் இலவச ஸ்கூட்டர்கள் வழங்கப்படுகின்றன. 2025-26ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்கான முன்மொழிவை அம்மாநில அரசு நிறைவேற்றியுள்ளது. 2025-26ஆம் ஆண்டில் ஒவ்வொரு கல்லூரியிலும் தேர்ச்சி பெறும் மாணவிகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற முதல் 5 சதவீதப் பேருக்கு மாநில அரசு ஸ்கூட்டர்களை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் திறமையான மாணவிகள் உயர் கல்வியைத் தொடர ஊக்குவிப்பதும், அவர்களின் பயணத்தை எளிதாக்குவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
அரசின் உதவியுடன் ஸ்கூட்டரைப் பெறுவதற்கு இத்திட்டத்தில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
ராணி லட்சுமிபாய் ஸ்கூட்டித் திட்டம், மாநிலத்தின் பூர்வீகக் குடிமக்களாக உள்ள மாணவிகளுக்கு மட்டுமே ஸ்கூட்டர்களை வழங்குகிறது. அரசு அல்லது தனியார் கல்லூரிகளில் இளங்கலைப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் திறமையான மாணவிகள் இதில் பங்கேற்கத் தகுதியுடையவர்கள் ஆவர். ஒவ்வொரு கல்வி நிறுவனத்தின் தேர்ச்சி பெறும் தொகுதியிலிருந்தும் (Batch) சிறந்த மதிப்பெண் பெற்ற முதல் 5 சதவீத மாணவிகள் இத்திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இத்திட்டத்தில் சேருவதற்கு குடும்ப வருமானமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஒரு மாணவியின் குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ. 12 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் மட்டுமே அவர் தகுதியுடையவராகக் கருதப்படுவார். இருப்பினும், மாற்றுத்திறனாளி மாணவிகள், ஆதரவற்ற மாணவிகள் மற்றும் தியாகிகளின் குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இலவச ஸ்கூட்டருடன் என்னென்ன கிடைக்கும்?
இலவச ஸ்கூட்டருடன் சேர்த்து ஆரம்பக்கட்டமாக 5 லிட்டர் பெட்ரோலையும் அரசு வழங்குகிறது. மேலும், ஹெல்மெட், வாகனத்திற்கான RTO பதிவு மற்றும் வாகனக் காப்பீடு ஆகியவற்றிற்கான செலவுகளையும் அரசே ஏற்கிறது. இத்திட்டத்தின் பலன்களைப் பெற சில ஆவணங்கள் தேவைப்படுகின்றன. ஆதார் அட்டை, இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்புச் சான்றிதழ்கள், கல்லூரி அடையாள அட்டை, வங்கிப் புத்தகப் பிரதி (passbook), பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் மொபைல் எண் ஆகியவை தேவைப்படும்.
இலவச ஸ்கூட்டி திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி?
இத்திட்டத்தின் பலன்களைப் பெற மாணவிகள் உயர் கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது UP ஸ்காலர்ஷிப் போர்ட்டலை (scholarship.up.gov.in) பார்வையிட வேண்டும். அந்த இணையதளத்தில் ‘Rani Laxmibai Scooty Yojana’ என்ற பகுதியைக் கிளிக் செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து புதிய பதிவை மேற்கொள்ள உங்கள் மொபைல் எண், ஆதார் எண் மற்றும் தேர்வு எண் ஆகியவற்றை உள்ளிட வேண்டும். அதன் பின்னர், உங்கள் மதிப்பெண் பட்டியல்கள், வருமானச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
திட்டத்தில் விண்ணப்பித்த பிறகு, கல்லூரி அல்லது பல்கலைக் கழகம் உங்கள் தகுதி மற்றும் மதிப்பெண்களைச் சரிபார்த்து, அந்தப் பட்டியலைத் துறைக்கு அனுப்பும். இறுதித் தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகளுக்கு ஒரு விழாவில் ஸ்கூட்டர்களின் சாவிகளும் ஆவணங்களும் வழங்கப்படும்.
