ஹோலி பண்டிகையின்போது ஒருவர் மீது ஒருவர் கலர் பொடியைத் தூவுவது வழக்கம். அவ்வாறு கலர் பொடியைத் தூவுவது சில நேரங்களில் சண்டையில் முடிந்துவிடும்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகில் உள்ள கொராடி என்ற இடத்தைச் சேர்ந்த ஓம் ஹரீஷ் என்ற 4 வயது சிறுவன் தனது வீட்டிற்கு வெளியில் கலர் பொடி கலந்த தண்ணீர் நிரப்பப்பட்ட பீச்சாங்குழல் மூலம் தெருவில் செல்பவர்கள் மீது கலர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்துக்கொண்டிருந்தான்.
அவனுடன் அவனது நண்பர்களும் சேர்ந்து விளையாடினர். அந்நேரம் வீட்டிற்கு வெளியில் சிறுவனின் பாட்டி சிந்து தாக்கரே பக்கெட்டில் சுடு நீர் எடுத்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது ஓம் ஹரீஷ் தவறுதலாகத் தனது பாட்டி மீது கலர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தான். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. கோபத்தில் சிந்து தனது பக்கெட்டில் இருந்த கொதிக்கும் சுடு நீரைத் தனது பேரன் மீது ஊற்றினார்.

இதனால் உடல் சூட்டில் சிறுவன் கதறினார். அருகில் மற்றொரு சிறுமி தண்ணீர் பக்கெட்டுடன் வந்து கொண்டிருந்தார். அந்தச் சிறுமி தனது பக்கெட்டில் இருந்த தண்ணீரை எடுத்து சிறுவன் மீது ஊற்றி சூட்டைக் குறைக்க முயன்றார். சிறுவனின் நிலையைப் பார்த்த பாட்டி சிறுமி வைத்திருந்த பக்கெட் தண்ணீரை வாங்கி அப்படியே சிறுவன் மீது ஊற்றி சூட்டைக் குறைக்க முயன்றார்.
சுடு நீரால் பலத்த காயம் அடைந்த சிறுவன் நாக்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சிறுவனுக்கு 45 சதவீதம் அளவுக்குக் காயம் ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
சிந்து மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோபத்தில் பாட்டி செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
