இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இப்போட்டியில், வெற்றியைப் பெறும் அணி, தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என்பதால், இப்போட்டி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இங்கிலாந்து இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில், ஓபனர்கள் அபாரமாக செயல்பட்டனர். பென் டக்கெட், ஜாகப் பெத்தல் இருவரும் தொடர்ச்சியாக மிரட்டலாக செயல்பட்டனர். இருவரும் சேர்ந்து, 181 பந்துகளில் 192 ரன்களை குவித்தார்கள். இறுதியில், பெத்தல் 93 பந்துகளில் 11 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 91 ரன்களை குவித்து அவுட் ஆனார்.
இதனைத் தொடர்ந்து, பென் டக்கெட்டுடன், ஜோ ரூட் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தார். இந்த இருவரும் 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும், 80 பந்துகளில் 101 ரன்களை குவித்து, ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தினார்கள். இந்நிலையில், பென் டக்கெட் 135 பந்துகளில் 18 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 141 ரன்களை குவித்து, நடையைக் கட்டினார்.
பிறகு, ஜோ ரூட் 48 பந்துகளில் 74 ரன்களையும், ஜாஸ் பட்லர், 13 பந்தில் 4 பவுண்டரி 3 சிக்ஸர்கள் உட்பட 41 ரன்களை சேர்த்து அசத்தினார். இந்த இருவரும் சேர்ந்து, கடைசி 19 பந்துகளில் 63 ரன்களை குவித்தார்கள். இதனால், இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 387/3 ரன்களை குவித்து அசத்தியது.
இந்திய அணியில், மொத்தமே 5 பௌலர்கள் மட்டுமே இருந்தனர். 6ஆவது பௌலிங் ஆப்ஷன் இல்லை. இது, இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
இந்திய அணியால் வெல்ல வெல்ல முடியுமா? லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில், இதற்குமுன் அடிக்கப்பட்ட பெரிய ஸ்கோர், 334 ரன்கள். இது, 1975ஆம் ஆண்டில்தான் அடிக்கப்பட்டது. அப்போது, இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிராக, இந்த ரன்களை அடித்தது. இதற்குமுன், இரண்டாவது பெரிய ஸ்கோராக, 2025ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி அடித்த, 330/8 ரன்கள்தான் இருந்தது.
கடைசி 5 போட்டிகள்: லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில், கடைசியாக விளையாடப்பட்ட 5 ஒருநாள் போட்டிகளிலும், முதலில் களமிறங்கிய அணிகள்தான் வென்றிருக்கிறது. அதுவும், இந்த 5 போட்டிகளில் 52 ரன், 100 ரன், 100 ரன், 186 ரன், 5 ரன்கள் வித்தியாசத்தில்தான், முதலில் களமிறங்கிய அணிகள் வென்றிருக்கிறது.
மேலும், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில், ஒருநாள் பார்மெட்டில், முதலில் களமிறங்கும் அணிகள்தான் பெரிய ஸ்கோரை அடிக்க முடிகிறது. இரண்டாவது பேட்டிங் செய்யும்போது, எக்ஸ்ட்ரா பவுன்ஸ், ஸ்விங்கும் சற்று அதிகமாக இருக்கும். இதனால், இந்திய அணி, இப்போட்டியில் வெற்றியைப் பெறுவது கடினம்தான்.
இங்கிலாந்து ஒருநாள் அணி, ஐசிசி தரவரிசையில் பின்னடைவில் இருக்கிறது. 7ஆவது இடத்தில்தான் இருக்கிறார்கள். இந்திய அணி முதல் இடத்தில் இருக்கிறது. இந்நிலையில், இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து வென்றால், அது இங்கிலாந்து அணிக்கு பெரிய விஷயமாக இருக்கும்.
காரணம், ஒருநாள் உலகக் கோப்பை 2023 தொடருக்கு பிறகு, இங்கிலாந்து அணி 29 போட்டிகளில் விளையாடி, 4 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
