‘சித்தாரே ஜமீன் பர்’ படத்தின் ப்ரோமோஷன் சமயத்தில் ஆமிர் கான் வருடத்திற்கு ஒரு படமாவது கொடுப்பதற்கு முயற்சி செய்வதாகக் கூறியிருந்தார்.

ஆமிர் கான் நடிப்பில் இந்த ஆண்டு “சித்தாரே ஜமீன் பர்’ திரைப்படம் திரைக்கு வந்திருந்தது.
அப்படத்தைத் தொடர்ந்து பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் ஒரு பயோபிக் படத்தில் நடிக்கவிருப்பதாகவும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாகவும் பேச்சுகள் கடந்த சில மாதங்களாகவே இருந்து வருகின்றன.
ரசிகர்களும் இப்படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.

‘சித்தாரே ஜமீன் பர்’ படத்தின் புரோமோஷன் சமயத்தில் ஆமிர் கான் வருடத்திற்கு ஒரு படமாவது கொடுப்பதற்கு முயற்சி செய்வதாகக் கூறியிருந்தார்.
சமீபத்தில் இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் நடத்திய லீடர்ஷிப் சம்மிட்டில் கலந்து கொண்ட ஆமிர் கான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் திரைப்படம் தொடர்பாக கூறியிருக்கிறார்.
அங்கு பேசிய ஆமிர் கான், “ஒரு வருடத்திற்கு ஒரு திரைப்படம் செய்ய வேண்டும் என்பதுதான் என் நோக்கம்.
சொல்லப்போனால் என்னுடைய எமோஷனும் அதுதான். ஆம், நான் வருடத்திற்கு ஒரு படம் கொடுப்பேன் எனச் சொல்லியிருந்தேன்.
(சிரித்துக் கொண்டே…) அதைச் செய்வதற்கு நிச்சயமாக முயற்சி செய்வேன். இந்த விஷயம் எனக்குப் பிடிக்கும் கதையைச் சார்ந்தது.
எனக்கொரு கதை பிடிக்கவில்லை என்றால், அதில் நான் நடிக்க மாட்டேன். லோகேஷ் கனகராஜும் நானும் சந்திக்க வேண்டும். கடந்த மாதம் நாங்கள் பேசினோம்.
அவர் மும்பைக்கு வரும்போது கதைக்கான நரேஷன் வைத்துக்கொள்ளலாம் எனச் சொல்லியிருக்கிறார். அத்திரைப்படமும் நடப்பதற்கான திட்டத்தில்தான் இருக்கிறது.” என்றார்.
