சுங்கக் கட்டணம் தொடர்பாக நிறைய மாற்றங்கள் இந்தியாவில் அமலுக்கு வந்துள்ளன. இதனால் சுங்கச் சாவடி களில் வாகன ஓட்டிகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறைந்து, வாகனப் போக்குவரத்து எளிதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளுக்கு 20 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வசித்து, தினமும் அந்தச் சுங்கச் சாவடி வழியாகப் பயணம் செய்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இனி, மாதாந்திர உள்ளூர் பயண அனுமதிச் சீட்டைப் பெற சுங்கச் சாவடியில் வரிசையில் நிற்கவோ அல்லது ஆவணங்களைச் சமர்ப்பிக்கவோ தேவையில்லை.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ( NHAI ) தனது ‘RajmargYatra’ (ராஜ்மார்க் யாத்ரா) மொபைல் செயலியில் புதிய டிஜிட்டல் உள்ளூர் பாஸ் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வசதியின் மூலம் தகுதியுள்ள நபர்கள் வீட்டிலிருந்தபடியே தங்கள் மொபைல் போன்கள் வழியாக மாதாந்திர பாஸ்களை வாங்கிக் கொள்ளலாம். தற்போது, இந்த வசதி ஒரு சில சுங்கச் சாவடிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நாடு முழுவதும் உள்ள பிற சுங்கச் சாவடிகளிலும் இந்த வசதி செயல்படுத்தப்படும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் பாஸ் வசதி !
ஒரே சுங்கச் சாவடி வழியாக அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு சலுகை வழங்குவதே இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இந்த புதிய அம்சத்தின் நோக்கமாகும். தகுதியுள்ள சுங்கச் சாவடிக்கு 20 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் உங்கள் வீடு அமைந்திருந்தால் செயலி மூலமாகவே வரம்பற்ற பயணங்களுக்கான மாதாந்திர பாஸை நீங்கள் வாங்கலாம். அதாவது, ஒரு மாத காலத்திற்கு நீங்கள் மீண்டும் மீண்டும் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. முன்பெல்லாம், இந்தப் பாஸைப் பெற சுங்கச் சாவடிக்கு நேரில் சென்று முகவரி, வாகனம் மற்றும் பிற ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது, இந்த முழு செயல்முறையும் ஆன்லைனிலேயே நடைபெறுகிறது.
சரிபார்ப்பு செயல்முறை!
உங்கள் ஒப்புதலைப் பெற்ற பிறகு, ‘RajmargYatra’ செயலியானது DigiLocker மற்றும் VAHAN தளங்களிலிருந்து உங்கள் முகவரி, வாகன எண் மற்றும் ஃபாஸ்டாக் தகவல்களைத் தானாகவே எடுத்துக்கொள்ளும். பின்னர், GIS அடிப்படையிலான இருப்பிடச் சரிபார்ப்பு மூலம் உங்கள் வீடு சுங்கச் சாவடியிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிற்குள் உள்ளதா என்பது உறுதி செய்யப்படும். நீங்கள் தகுதியுடையவர் எனத் தெரியவந்தால் நேரடியாகச் செயலி மூலமாகவே உள்ளூர் பாஸை வாங்கிக் கொள்ளலாம்.
மார்க் மித்ரா செயலியில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு!
‘RajmargYatra’ செயலியில் ‘ MargMitra ‘ எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த உதவி மையத்தையும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சேர்த்துள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இந்தியாவின் 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் எதில் வேண்டுமானாலும் நீங்கள் கேள்விகளைக் கேட்கலாம் அல்லது புகார்களைப் பதிவு செய்யலாம். ஃபாஸ்டாக் ரீசார்ஜ், KYC, ரீஃபண்ட் பெறுதல், உள்ளூர் அல்லது வருடாந்திர பாஸ்கள், ஃபாஸ்டாக் தடுப்புப்பட்டியல் (black list), மின்னணு அறிவிப்புகள் அல்லது நெடுஞ்சாலை தொடர்பான வேறு ஏதேனும் தகவல்கள் உங்களுக்குத் தேவைப்பட்டால் அதற்கு உதவ ‘Marg Mitra’ செயலி உள்ளது.
புகார்களை நேரடியாக இந்தச் செயலி மூலமாகவே பதிவு செய்யலாம். உங்கள் புகார் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்படும். அதன் நிலையை நீங்கள் நிகழ்நேரத்தில் கண்காணிக்கலாம். தேவைப்பட்டால், அந்த முடிவின் மீது மேல்முறையீடு செய்வதற்கான வசதியும் உங்களுக்கு உள்ளது. வேலை, தொழில், கல்வி அல்லது பிற காரணங்களுக்காகத் தினமும் ஒரே சுங்கச் சாவடியைக் கடந்து செல்பவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இனி, பாஸ் பெறுவதற்காக அவர்கள் சுங்கச் சாவடிக்கு நேரில் செல்ல வேண்டியதில்லை. இந்த முழுச் செயல்முறையையும் மொபைல் போன் மூலமாகவே சில நிமிடங்களில் முடித்துவிடலாம்.
