கொரியாவில் கஷ்டப்படும் தமிழ்ப் பெண் என்ற ஒன்லைனை விரிக்க, லாஜிக்கற்ற காட்சிகளையும், ஆழமற்ற எமோஷனல் வசனங்களையுமே துணைக்கு அழைக்கிறது திரைக்கதை. திக்குத் தெரியாத நாட்டில் நாயகியின் கையறு நிலையைப் பிரதானப்படுத்தாமல் அங்கும் அவரின் பழைய பிரச்னைகளையே முன்னிறுத்துகிறது படம். நாயகிக்கு வேலை கிடைப்பது, அங்கு வசிக்கும் பாட்டியின் ரகசியத் திட்டம் போன்றவையும் ‘சிறுவர்கள் விளையாட்டு’ பாணியிலேயே நகர்கின்றன.
கொரியாவுக்கும் தமிழுக்கும் இருக்கும் தொடர்பு, ஹோட்டல் வைத்திருக்கும் அப்பாவின் ஸ்பெஷாலிட்டியான பூண்டு சாதத்தை செண்பா, கொரிய கிம்சி ரைஸுடன் கலப்பது, பாட்டிக்கும் செண்பாவுக்கும் இடையே உருவாகும் அந்த நட்பு, எங்குச் சென்றாலும் உதவிடும் மனிதர்கள் என ஒரு சில இடங்கள் மட்டுமே அந்த ‘ஃபீல் குட்’ உணர்வுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன. கொரிய கலாசாரத்தை செண்பா விரும்புவதற்கான காரணம் ஆழமாக இருந்தாலும், கே-பாப் இசை, தொடர்கள் போன்றவற்றில் அவருக்கு இருக்கும் காதல் குறித்த விவரணைகள், வெளிப்பாடுகள் எங்குத் தேடியும் காணவில்லை. ஹோட்டல் தொடங்கும் ஐடியா ஓகே என்றாலும், அடுத்து இசைக்குழு, பணத்தேவை என நீளும் க்ளைமாக்ஸ் டிராமா, ‘எதுக்கு இதெல்லாம்?’ என்றே கேட்க வைக்கின்றன.
