ஐபிஎல் தொடரின் நேற்றைய (மார்ச்.29) போட்டியில் மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதின.
இதில் கொல்கத்தா அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது.
இதன் மூலம் 13 வருடங்கள் கழித்து தனது முதல் போட்டியில் வெற்றி பெற்று அசத்தி இருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.
சிறப்பாக விளையாடிய ஷர்துல் தாகூர் ஆட்டநாயகன் விருதை வென்றார். விருது வென்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “எனக்கு சவால்கள் என்றால் பிடிக்கும். நேற்று நான் பந்து வீசியதில் 6-வது ஓவர், மிகவும் சவாலான ஒன்றாக இருந்தது.
சவால்கள்தாம் என்னை இதுவரை உருவாக்கின. அவற்றை நான் ரசிக்கிறேன். இந்த மைதானம் எனக்கு கசப்பான மற்றும் இனிப்பான நினைவுகள் இரண்டையுமே கொடுத்திருக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக என் சொந்த மண்ணில் விளையாடுவது மிகவும் சிறப்பான ஒரு விஷயம்.
நான் 2010, 2011, 2012 சீசன்களில் இந்த அணியுடன் ஒரு நெட் பவுலராகவும், வளர்ந்து வரும் வீரராகவும் இருந்திருக்கிறேன்.
இங்கே சத்தமில்லாமல் பந்துவீசி என் அடையாளத்தை உருவாக்கினேன். நான் இதே அணியில் தொடர்ந்து இருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.
இது என் சொந்த ஊர். இங்கு எனக்கு கிடைக்கும் ஆதரவைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

லக்னோ அணியிலிருந்து என்னை டிரேடிங் செய்து, முதல் போட்டியிலேயே வாய்ப்பளித்த மும்பை இந்தியன்ஸ் குடும்பத்திற்கு எனது நன்றிகள்.
ஒவ்வொரு முறையும் கடினமான போட்டிகளில் விளையாடும்போது நிறைய விமர்சனங்கள் வரும்.
ஆனால், அவற்றுக்கு இடையே நீங்கள் சிறப்பாகச் செயல்படும்போது, மக்கள் அன்பை வெளிப்படுத்துவார்கள்” என்று பேசியிருக்கிறார்.
