இந்திய ஆன்மிக இலக்கிய வரலாற்றில் சில நூல்கள் வெறும் இலக்கியங்கள் அல்ல. அவை பக்தியின் உயிரோட்டமாகவே போற்றப்படுகின்றன. அவற்றில் ஒன்றாகத் திகழ்வது “ஸ்ரீ நாராயணீயம்.” ஸ்ரீமத் பாகவதத்தின் சாரமாக, குருவாயூரப்பனின் திருவடிகளில் அர்ப்பணிக்கப்பட்ட இந்த மகாகாவியம், பக்தி, ஞானம், சரணாகதி ஆகியவற்றின் உச்சமாக விளங்குகிறது. இந்த நூலை எழுதிய மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி, கடுமையான வாத நோயால் உடலையே அசைக்க முடியாத நிலையில் இருந்தார். அவரால் குருவாயூரப்பனைப் பார்க்க முடியவில்லை. ஆனால், குருவாயூரப்பனே தனது திருமுகத்தைத் திருப்பி, தலையை அசைத்து அவரது ஒவ்வொரு ஸ்லோகத்தையும் கேட்டார் என்று பக்தி மரபில் போற்றப்படும் இந்த நிகழ்வு, இன்று வரை கோடிக்கணக்கான பக்தர்களின் மனதை நெகிழச் செய்கிறது.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ குருவாயூரப்பன் திருக்கோயில், இந்தியாவின் மிக முக்கியமான வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இங்கு அருள்பாலிக்கும் குருவாயூரப்பன், பாலகிருஷ்ணன் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார். இந்தத் திருத்தலம், எண்ணற்ற பக்தர்களின் கண்ணீரைத் துடைத்த தெய்வீக பூமியாகப் போற்றப்படுகிறது. கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி, சமஸ்கிருத இலக்கியத்திலும் வேத சாஸ்திரங்களிலும் சிறந்து விளங்கிய மகா பண்டிதர். அவரது குரு அச்சுத பிஷாரடி கடுமையான வாத நோயால் அவதிப்பட்டு வந்தார்.
தனது குருவின் துன்பத்தைப் பார்த்த பட்டத்திரி, “என் குருவின் நோய் என்னிடம் வரட்டும்; அவர் குணமடையட்டும்.” என்று மனமாரப் பிரார்த்தித்ததாக பக்தி மரபு கூறுகிறது. அவரது சரணாகதியால், குருவின் வாத நோய் பட்டத்திரிக்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வாத நோய் நாளுக்கு நாள் அதிகரித்தது. நடக்க முடியவில்லை. நிற்க முடியவில்லை. கழுத்தைக் கூட திருப்ப முடியாத அளவுக்கு உடல் வலியால் வாடினார். ஆனால், அவரது மனம் மட்டும் இறைவன் மீது அசையாத நம்பிக்கையோடு இருந்தது.
எழுத்தச்சன் கூறிய மர்மமான உபதேசம் :
அப்போது, பட்டத்திரி, துஞ்சத்து எழுத்தச்சன் என்பவரை சந்தித்து, “இந்த நோயிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அப்போது எழுத்தச்சன், “மீன் தொட்டு கூட்டு.” என்று சுருக்கமாக கூறியதாக பாரம்பரிய வரலாறு கூறுகிறது. இந்த வார்த்தையின் பொருளை முதலில் பட்டத்திரி புரிந்து கொள்ளவில்லை. பின்னர் அதன் ஆழமான அர்த்தம் அவருக்கு விளங்கியது. “மத்ஸ்ய அவதாரத்திலிருந்து தொடங்கி, ஸ்ரீமன் நாராயணனின் மகிமைகளைப் பாடு.” என்பதே அந்த உபதேசத்தின் உண்மையான பொருள்.
கண்ணீர் விட்ட பக்தர் :
கடுமையான வாத நோயால் நடக்க முடியாத பட்டத்திரியை பத்து பேர் சேர்ந்து ஒரு பல்லக்கில் தூக்கிச் சென்று, குருவாயூருக்கு அழைத்து வந்தனர். முதலில் நாராயண சரஸ் எனப்படும் புனிதக் குளத்தில் நீராடச் செய்தனர். பின்னர், குருவாயூரப்பன் சன்னதிக்கு எதிரே இருந்த ஒரு மண்டபத்தில் அவரை அமர வைத்தனர். இன்றும் அந்த இடம் “பட்டத்திரி மண்டபம்” என்ற பெயரில் பக்தர்களால் போற்றப்படுகிறது. நோயின் காரணமாக பட்டத்திரியால் கழுத்தைக் கூட திருப்ப முடியவில்லை. அதனால் குருவாயூரப்பனின் திருமுகத்தை தரிசிக்க இயலவில்லை. அவர் கண்ணீர் மல்கப் பிரார்த்தித்தார். “குருவாயூரப்பா…உன்னைப் பற்றிப் பாடுவதற்காகவே வந்திருக்கிறேன். ஆனால் உன் திருமுகத்தைப் பார்க்கக்கூட என்னால் முடியவில்லை!” என்று உருக்கமாக அழுதார்.
பக்தனுக்காக தலையைத் திருப்பிய குருவாயூரப்பன் :
பக்தனின் கண்ணீரைக் கண்ட குருவாயூரப்பன் கருணையுடன், “பட்டத்திரியே…உன்னால் என்னைப் பார்க்க முடியவில்லை என்பதற்காக ஏன் வருந்துகிறாய்? நான் உன்னைப் பார்க்க முடியாதா? நீ பாடு, நான் என் திருமுகத்தை உன்னை நோக்கித் திருப்பி, ஒவ்வொரு ஸ்லோகத்தையும் கேட்கிறேன்.” என்று அருளியதாக பக்தி மரபு கூறுகிறது. அன்றிலிருந்து பட்டத்திரி பாடிய ஒவ்வொரு ஸ்லோகத்தையும் குருவாயூரப்பன் தலையை மெதுவாக அசைத்து அங்கீகரித்தார் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
நாராயணீயத்தின் பிறப்பு :
அதன் பின்னர் தினமும் ஒரு தசகம் வீதம் மொத்தம் 100 தசகங்கள், அதாவது 1036 ஸ்லோகங்கள் என்று நூறு நாட்கள் தொடர்ந்து பட்டத்திரி பாடினார். அவ்வாறு உருவானதே “ஸ்ரீ நாராயணீயம்.” இந்த நூல், ஸ்ரீமத் பாகவதத்தின் சாரமாகவும், குருவாயூரப்பனின் மகிமையைப் பாடும் ஆன்மிகக் காவியமாகவும் போற்றப்படுகிறது. நாராயணீயத்தின் முதல் ஸ்லோகம், “ஸாந்த்ரானந்தாவபோதாத்மகம்…” என்று தொடங்குகிறது. பக்தி மரபில், இந்த முதல் ஸ்லோகத்தின் தொடக்கச் சொல்லையே குருவாயூரப்பன் அருளியதாக நம்பப்படுகிறது. அதனால் இந்த நூல் வெறும் மனிதர் எழுதிய காவியம் அல்ல. இறைவனின் அருளால் பிறந்த தெய்வீக நூல் என்று பக்தர்கள் கருதுகின்றனர்.
நாராயணீயம் நிறைவடைந்த அதிசயம் :
நூறாவது நாளில் பட்டத்திரி இறுதி தசகத்தைப் பாடி முடித்தார். இறுதியில், குருவாயூரப்பனின் திவ்ய மங்கள வடிவத்தை நேரில் தரிசித்ததாகவும், அவரது வாத நோய் பெருமளவில் நீங்கி உடல் நலம் பெற்றதாகவும் வரலாறு கூறுகிறது. இந்த நிகழ்வு, பக்தியின் வெற்றிக்கு அழியாத சாட்சியாக இன்றும் போற்றப்படுகிறது. நாராயணீயம் மூன்று வகையான பெருமைகளை உடையதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.
– நூலை இயற்றிய பக்தரின் பெருமை.
அதில் கூறப்படும் ஸ்ரீமன் நாராயணனின் மகிமை. அந்த நூலைப் பாராயணம் செய்வதால் கிடைக்கும் ஆன்மிக நன்மைகள்.நாராயணீயம் பாராயணம் செய்வது மன அமைதி, இறைநம்பிக்கை, பக்தி வளர்ச்சி, உடல், மன உறுதி வேண்டிப் பிரார்த்தனை என்பவற்றிற்காக மேற்கொள்ளப்படுகிறது.
Source link
