இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர். மற்ற போக்குவரத்து முறைகளுடன் ஒப்பிடும்போது ரயில்களில் பயணக் கட்டணம் மிகவும் குறைவு. அதேவேளையில் விரைவாகவும் பாதுகாப்பாகவும் செல்ல முடியும். ரயில் பயணிகளின் வசதியை மேம்படுத்த இந்திய ரயில்வே பல்வேறு சேவைகளை வழங்கி வருவதோடு, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகப் பல விதிமுறைகளையும் அமல்படுத்தி வருகிறது.
பலருக்கு ரயில் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுவதில் சிரமம் ஏற்படுகிறது. திடீரென அவசரப் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும்போது பெரும்பாலான மக்களுக்கு உறுதிபடுத்தப்பட்ட டிக்கெட் கிடைப்பது சவாலாக இருக்கிறது. அதுவும் பண்டிகைக் காலங்கள் மற்றும் திருமண விசேஷங்களின்போது டிக்கெட் கிடைப்பது இன்னும் கடினமாக இருக்கும். சில சமயங்களில் டிக்கெட் கிடைக்காததால் பயணத்தையே தள்ளிப்போட வேண்டிய சூழலும் ஏற்படலாம்.
இதுபோன்ற சூழலில், நேரம் கடந்துவிட்டதாகவோ அல்லது தட்கல் டிக்கெட்டுகள் கூட தீர்ந்துவிட்டதாகவோ நாம் நினைக்கலாம். பயணப் பட்டியல் (chart) தயாரிக்கப்பட்ட பிறகு இனி சீட் கிடைக்கப் போவதே இல்லை என்று முடிவு செய்துவிடுகிறாம். ஆனால், உண்மையில் அப்படி இல்லை. சில ரயில்களில் கடைசி நேரத்தில் கூட உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை நம்மால் பெற முடியும். டிக்கெட் முன்பதிவு தொடர்பாக ரயில்வே நிர்வாகம் பல விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த விதிகளின்படி, முதல் முன்பதிவுப் பட்டியல் (reservation chart) தயாரிக்கப்பட்ட பிறகும் கூட நீங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
கடைசி நேரத்தில் இருக்கைகள் காலியாக உள்ளதா என்று சரிபார்த்தால் உங்களுக்கு டிக்கெட் கிடைக்க வாய்ப்புள்ளது. அதற்கு ‘Current Availability’ என்ற வசதியின் கீழ் நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ரயில் புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு வரை இந்த வசதியைப் பயன்படுத்தி நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். அதற்கு நீங்கள் செல்லும் ரயில் சேவையைப் பற்றி முழுவதும் அறிந்திருக்க வேண்டும். சில சமயங்களில், கடைசி நேர ரத்துசெய்தல்களால் சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகும் கூட இருக்கைகள் காலியாக இருக்கலாம்.
சுங்கச் சாவடிகளில் அதிக கட்டணம் – உள்ளூர் வாசிகளுக்கு சூப்பர் வசதி: ஆன்லைனில் கிடைக்கும் பாஸ்
அத்தகைய சூழலில், IRCTC இணையதளத்தில் ‘Current Availability’ என்ற விருப்பத்தைச் சரிபார்க்கலாம். காலியான இருக்கையைக் கண்டவுடன் நீங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். இதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் கிடையாது. சில சமயங்களில், சாதாரண கட்டணத்தை விடக் குறைவான விலையில் அல்லது தள்ளுபடியுடன் டிக்கெட்டுகள் கிடைக்கலாம். ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரிலும் தற்போதைய இருப்பு டிக்கெட் நிலையைச் சரிபார்த்து முன்பதிவு செய்யலாம்.
அவசர அடிப்படையில் பயணம் செய்யும்போது உங்களிடம் ‘காத்திருப்போர் பட்டியல்’ (waiting list) டிக்கெட் இருந்தால் ரயிலில் உள்ள TTE அதிகாரியிடம் (டிக்கெட் செக்கர்) இருக்கை ஒதுக்கீடு குறித்துப் பேசலாம். சில சமயங்களில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தும் பயணிகள் தங்கள் இருக்கைகளைப் பயன்படுத்திக்கொள்வதில்லை. கடைசி நேர ரத்து அல்லது ரயிலைத் தவறவிடுதல் போன்ற காரணங்களால் அவ்வாறு நடக்கலாம். அத்தகைய சூழலில், நீங்கள் TTEயிடம் பேசினால், ரயில்வே விதிமுறைகளின்படி அவர் உங்களுக்கு சீட் ஒதுக்கீடு செய்ய முடியும்.
