Sreeleela: "சினிமாவில் 'டாக்டர்' ஸ்ரீலீலா அல்ல; வெறும் ஸ்ரீலீலாதான்" – மனம் திறந்த நடிகை ஸ்ரீலீலா

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருப்வர் நடிகை ஸ்ரீலீலா. சமீபத்தில் வெளியான பராசக்தி திரைப்படத்துக்குப் பிறகு, பவன் கல்யாணுடன் இவர் இணைந்து நடித்துள்ள ‘உஸ்தாத் பகத் சிங்’ படம் உருவாகியிருக்கிறது.

கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்தின் படப்பிடிப்பு, பல்வேறு காரணங்களால் தள்ளிப்போய் 2025-ம் ஆண்டில்தான் நிறைவடைந்திருக்கிறது. இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஸ்ரீலீலா தனியார் செய்தி நிறுவனத்துக்குப் அளித்த பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

Sreeleela

அவரின் பேட்டியில், “இரண்டு ஆண்டுகள் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்தது. இந்தப் படம் நடித்துக்கொண்டிருக்கும்போது நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால், அவை எல்லாவற்றையும் தவிர்த்து வந்தேன்.

இந்தக் கதாபாத்திரம் அவ்வளவு வலிமையானது. எனது திரைப்பயணத்திலேயே மிகவும் சிறப்பாக எழுதப்பட்ட பாத்திரம் இதுதான். இதில் ‘லீலா’ என்ற துடிப்பான பெண்ணாக நடித்துள்ளேன்.

இயக்குநர் ஹரிஷ் சங்கர் படப்பிடிப்புக்கு முன்பாக எந்தவொரு வசனமோ அல்லது ஸ்கிரிப்ட்டோ என்னிடம் வழங்கவில்லை. அன்றைய தினமே ஸ்பாட்டில் கொடுக்கப்படும் வசனங்களைப் படித்துவிட்டு உடனே நடித்தேன். இது எனக்குப் புதிய மற்றும் சுதந்திரமான அனுபவத்தைத் தந்தது.

மேலும், இந்தப் படத்தில் மற்றொரு நாயகியான ராஷி கண்ணாவுடன் எனக்கு காட்சிகள் இல்லை என்றாலும், அவர் மிகவும் அன்பானவர். சினிமாப் பயணத்திற்கு இடையே கல்வியிலும் கவனம் செலுத்தினேன். 2020-ம் ஆண்டு தொடங்கிய எனது மருத்துவப் படிப்பை (MBBS) 2026-ன் தொடக்கத்தில் வெற்றிகரமாக முடித்திருக்கிறேன். படப்பிடிப்புத் தளங்களுக்கு இடையே மருத்துவப் படிப்பைத் தொடர்வது சவாலாக இருந்தது.

Sreeleela
Sreeleela

ஆனால், திரையுலகினர் எனது தேர்வுகளுக்கு ஏற்ப படப்பிடிப்புத் தேதிகளை மாற்றியமைத்து எனக்குப் பெரும் ஒத்துழைப்பு வழங்கினர். மருத்துவப் பட்டம் பெற்றாலும், எனது சினிமா பெயருக்கு முன்னால் ‘டாக்டர்’ என்ற பட்டத்தைப் பயன்படுத்த போவதில்லை.

மருத்துவம் என்பது எனது தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா என்பது தொழில்முறை வாழ்க்கை. இவை இரண்டையும் கலக்க நான் விரும்பவில்லை. மேடையிலோ அல்லது திரையிலோ நான் வெறும் ‘ஸ்ரீலீலா’வாகவே அறியப்பட விரும்புகிறேன். அதே சமயம், வருங்காலத்தில் மருத்துவமனை ஒன்றைக் கட்டி மக்களுக்குச் சேவை செய்யும் எண்ணம் உள்ளது” என்றார்.

Source link