‘விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸுக்கு எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அக்கட்சித் தலைவர் திருமாவளவன் வாய்ப்பு வழங்காதது ஏன்?’ என்ற கேள்வி சமூக வலைதளங்களில் வட்டமடிக்கின்றன. இச்சூழலில் நாமும் அதன் பின்னணி குறித்து விரிவாக விசாரித்தோம்.

2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் வி.சி.க-வுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் கடந்த மார்ச் 29-ம் தேதி வி.சி.க வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் திருமா. அதன்படி காட்டுமன்னார்கோவிலில் கட்சித் தலைவர் தலைவர் என்கிற முறையில் தானே போட்டியிடுவதாக அறிவித்தார்.
மேலும் கள்ளக்குறிச்சியில் மாலதி, திண்டிவனத்தில் வன்னி அரசு, திருப்போரூரில் பன்னீர்தாஸ், செய்யூரில் சிந்தனைச் செல்வன், பண்ரூட்டியில் அப்துல் ரகுமான், அரக்கோணத்தில் எழில் கரோலின், பெரியகுளத்தில் அற்றலரசு ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், வி.சி.க நட்சத்திர முகமாகவும், நாகை சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான ஆளூர் ஷாநவாஸுக்கு சீட் வழங்கவில்லை. இது கட்சிக்குள் பெரும் சலசலப்பை கிளம்பி சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியிருக்கிறது.
நம்மிடம் பேசிய வி.சி.க முன்னணி நிர்வாகிகள் சிலர், “தி.மு.க, அ.தி.மு.க-வை போல மீண்டும் மீண்டும் ஒரே நபருக்கு வாய்ப்பு வழங்கும் கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லை.

1999 முதல் தற்போதுவரை மொத்தமே 7 எம்.எல்.ஏ-க்களைத்தான் பெற்றிருக்கிறோம். இந்த நிலையில், மீண்டும் சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கே வாய்ப்பு வழங்கினால், 25 ஆண்டுக்காலமாக உழைப்பவர்கள் விரக்தியடைவார்கள் என்பதால் ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்ட மூன்று சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு திருமா சீட் தரவில்லை.” என்றனர்.

“மீண்டும் மீண்டும் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கும் கட்சியல்ல வி.சி.க என்பதில் லாஜிக் இல்லை. 6 பொதுத் தேர்தல்களில் தொடர்ச்சியாக போட்டியிட்ட நிர்வாகிகளும் இங்கே இருக்கிறார்களே” என அதிருப்தியுடன் வினவுகிறார்கள் வி.சி.க-வின் இளைஞரணி நிர்வாகிகள் சிலர்.
தொடர்ந்து பேசியவர்கள் “ஆரம்பக் கட்டத்தில் தலித் அமைப்பாக பார்க்கப்பட்ட வி.சி.க, இன்றைக்கு பொதுச் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதற்கு தலித் அல்லாத நிர்வாகிகளின் பங்களிப்பும் முதன்மையானது. அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் கருத்தியல் தெளிவுடன் கட்சிக்குள் வெளிப்பட்டவர் ஷாநவாஸ். 2016-ல் மக்கள் நலக் கூட்டணி சார்பில் குன்னம் தொகுதியில் போட்டியிட்ட ஷாநவாஸ் 23,000 வாக்குகள் பெற்று கவனம் ஈர்த்தார். பிறகு அவருக்கு எந்த வகையில் தொடர்பில்லாத நாகை சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு செய்தபோது அங்கும் வெற்றியை சாத்தியப்படுத்தினார்.
சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் நிரூபித்ததோடு, எந்த சர்ச்சைகளுக்குள்ளும் சிக்காதவர். இந்நிலையில் நான்குமுனை போட்டி நிலவும் இக்கட்டான சூழலில் அவருக்கு சீட் வழங்காமலிருப்பது புரியாத புதிராகவே இருக்கிறது. கடந்தமுறை தோல்வியடைந்த அண்ணன் வன்னி அரசுக்கு மீண்டும் சீட் வழங்கியது மகிழ்ச்சிதான். ஆனால் வெற்றிபெற்ற ஷாநவாஸுக்கு சீட் வழங்காதது வருத்தமே” என்றனர்.

நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர்கள், “நான்குமுனை களமாக இருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வு மிக மிக முக்கியமானதாக இருக்கும் . ‘தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் வெற்றி வாய்ப்புள்ளவர்களுக்கு சீட்’ என்பதில் மிக கவனமாக இருந்திருக்கிறார்கள். ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் தேர்வில் கட்சித் தலைமை சறுக்கியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏற்கனவே சிக்கலான தொகுதிகளை பெற்றிருக்கும் நிலையில் வெற்றி வியூகங்களை அறிந்து செயல்படக் கூடியவர்களையாவது வேட்பாளராக நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால், பனையூர் பாபு, ஷாநவாஸ், எஸ்.எஸ் பாலாஜி ஆகியோருக்கு ஏன் சீட் வழங்கவில்லை எனத் தெரியவில்லை. இது முக்கியமான தேர்தல் என்பதால்தான் திருமாவளவனே காட்டுமன்னார்கோவிலில் களமிறங்குகிறார். அப்படியிருக்கும்போது முக்கிய புள்ளிகளுக்கு சீட் மறுத்திருப்பது வியப்பளிக்கிறது” என்றனர்.
