தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சியினர் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய், சென்னை, தூத்துக்குடி, நெல்லை, காரைக்குடி உள்பட பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்தார்.
இதனிடையே, கடந்த 9-ந்தேதி கடலூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்வார் என அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் புதுச்சேரி தேர்தலை முன்னிட்டு பிரசாரம் 11-ஆம் தேதி நடைபெறும் என த.வெ.க. சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடலூர், வடலூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் இன்று (ஏப்ரல் 11) நடைபெற இருந்த விஜய் பிரசாரம் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக த.வெ.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரசாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் பிரசாரம் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
