ஆசிய கைப்பந்து போட்டியில் பங்கேற்ற கிராம மாணவர்; குவியும் பாராட்டுக்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் இனாம் கிராமத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் சிவகுரு – ராஜலட்சுமி- தம்பதியரின் மகன் ராஜகுருநாதன். கீரமங்கலம் வேம்பங்குடி மேற்கு கைப்பந்துக் கழகத்தில் சிறு வயதில் இருந்து கைப்பந்து பயிற்சி பெற்ற ராஜகுருநாதன், கோவை நேரு விளையாட்டு அரங்கில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு விடுதியில் கடந்த சில ஆண்டுகளாக தங்கி விளையாட்டு பயிற்சி பெற்று அந்தப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.

தற்போது 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக மாவட்ட, மாநில, தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் பங்கேற்று வந்த ராஜகுருநாதன், தற்போது 18 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கைப்பந்து அணிக்கு தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒருவராக இடம்பெற்றுள்ளார். இந்திய அணியில் இடம் பெற்றுள்ள இவர், சீனாவில் தற்போது நடைபெற்ற ஆசிய அளவிலான 18 வயதுக்கு உட்பட்டோருக்கான கைப்பந்து போட்டியிலும் இந்திய அணிக்காக விளையாடி ஊர் திரும்பியுள்ளார்.

18 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கைப்பந்து அணியில் இடம் பெற்று விளையாடி தமிழ்நாடு திரும்பியுள்ள ராஜகுருநாதனுக்கு முன்னாள் அமைச்சர்களான திருமயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி மற்றும் ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் பாராட்டியுள்ளனர். ஒரு கிராமத்து மாணவர் தனது தனித்திறமையால் மாவட்ட, மாநில, தேசிய அளவில் சாதித்து இந்திய அணிக்காக விளையாட தேர்வாகி ஆசிய போட்டியில் பங்கேற்றுள்ளதை கிராமத்தினர் பாராட்டி வரவேற்கின்றனர்.

Source link