இங்கிலாந்து வாழ் தமிழர்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு – முதல்வரின் தனி பாதுகாவலர் மூசா தகவல் – tamil nadu cm vijay meets nri tamils at london at sep 15

தமிழ்நாட்டின் முதல்வராக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பொறுப்பேற்றதில் இருந்து முதல் முறையாக லண்டன் சென்றுள்ளார். அங்கு தொழில் முதலீட்டாளர்களை சந்திக்க உள்ளார்.

முதல்வர் விஜய்க்கு முன்னதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா லண்டனுக்கு சென்றார். அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 10 ஆம் தேதி இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து முதல்வர் விஜய் நேற்று லண்டன் சென்றடைந்தார்.

சமூகவலைதளங்களில் வேகமாக பரவும் புகைப்படங்கள்

அரசு முறை காரணங்களுக்காக பயணம் மேற்கொள்ளும்போது தனி விமானம் அல்லது பிசினஸ் கிளாஸில் செல்வது வழக்கம். ஆனால் இதனை முதல்வர் விஜய் தவிர்த்து, வழக்கமான பயணிகள் விமானத்தில் பயணம் மேற்கொண்டார். அப்போது விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் விமானத்தில் பணி புரியும் ஊழியர்களும் முதல்வர்விஜய் உடன் செல்ஃபி எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

தற்போது அந்த புகைப்படங்கள் வேகமாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதனால் முதல்வரின் லண்டன் பயணம் மட்டுமின்றி, அவர் சாதாரண பயணிகள் விமானத்தில் பயணித்ததும், பயணிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதும் தனி கவனம் பெற்று பேசுபொருளாகியுள்ளது.

நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் போட்டியை தொடங்கி வைக்கும் CM

சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை அதிகரிக்க செய்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த பயணத்தின் முக்கிய நிகழ்வாக லண்டனில் இன்று (செப்டம்பர் 12) நடைபெறும் லீ மேன்ஸ் கப் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இந்த பந்தயத்தில் தமிழ் நடிகரும், கார் ரேஸருமான அஜித்குமார் பங்கேற்பதாக பந்தய அமைப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

புகழ்பெற்ற விடுதியில் தங்கியுள்ள முதல்வர்

முதல்வர் விஜய் லண்டனில் புகழ்பெற்ற நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார். நேற்று லண்டன் விமான நிலையத்தில் முதல்வர் விஜய்க்கு லண்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் அவர் தங்கியுள்ள நட்சத்திர விடுதி முன்பு அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் திரண்டு, முதல்வர் விஜய்யை சந்திப்பதற்காக காத்திருக்கின்றனர்.

இங்கிலாந்து வாழ் தமிழர்களுடன் முதல்வர் சந்திப்பு – தனி பாதுகாவலர் தகவல்

அவர்களை சந்தித்த முதல்வரின் விஜயின் தனி பாதுகாவலர் மூசா முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். அங்கு கூடியிருந்த மக்களை கலைந்து செல்லுமாறு கூறிய அவர், வருகிற செப்.15ஆம் தேதி முதல்வர் விஜய் இங்கிலாந்து வாழ் தமிழர்களை சந்திக்க உள்ளதாக கூறினார். மேலும் அன்று மதியம் 2 மணி அளவில் இந்த சந்திப்பு நடைபெறும் என அவர் கூறியுள்ளார். இதனால் நட்சத்திர விடுதி முன்பு மக்கள் காத்திருந்து தங்களது நேரத்தை வீணடிக்காது கலைந்து செல்ல வேண்டுமென அவர் கூறிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

செப்டம்பர் 16-ல் நிறைவடையும் பயணம்

தொடர்ந்து முதல்வர் விஜய் தனது அரசுமுறை லண்டன் பயணத்தை வருகிற செப்டம்பர் 16ஆம் தேதியுடன் முடித்துக்கொண்டு அவர் சென்னை திரும்ப உள்ளார் என பாதுகாப்பு பிரிவு சி.ஐ.டி தெரிவித்துள்ளது. இந்நிலையில் பயணம் முடிவடையும் கடைசி நாளில் இங்கிலாந்து வாழ் தமிழர்களை முதல்வர் விஜய் சந்திக்க உள்ளது தனி கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link