“இதனை ஏற்றுக்கொள்ள முடியாது” – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேட்டி!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா இன்று (28.07.2026) நடைபெற்றது. இந்த விழாவில்  முனைவர் பட்டம் மற்றும் பதக்கங்கள் பெறவிருந்த 871 பேருக்கு ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர் நேரடியாகப் பட்டம் வழங்கினார். இந்த விழாவின் தொடக்கத்தில் வந்தேமாதரத்திற்கு முதலிடம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட்டது. இதனையடுத்து தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவதாகக் கடைசி இடம் அளிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்த பட்டமளிப்பு விழாவைத் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணித்துள்ளார். 

அதாவது பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்தில் பாடப்படும் எனத் துணைவேந்தர் அறிவித்ததைத் தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து, அமைச்சர் விஸ்வநாதன் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்துள்ளார். இந்நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்படுவது தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநர் தரப்பிலிருந்து பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுவதாகத் தகவல்கள் வருகின்றன. அதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அதுதான் தமிழக அரசின் கொள்கை. 

இதற்கு மாறான வழிகாட்டுதல்கள் ஆளுநர் அலுவலகத்திலிருந்து வழங்கப்பட்டதாகக் கேள்விப்படுகிறோம். அதனால்தான் இந்த விவகாரம் முக்கியத்துவம் பெறுகிறது. தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இதுதான் தொடர்ந்து பின்பற்றப்படும் நடைமுறை. மேற்கு வங்கம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தின் பிராந்திய மரபுகளுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. அதேபோல தமிழ்நாட்டிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அதை மாற்ற முயற்சிப்பது தவறானது. அதனை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த ஒரு விஷயத்தையும் நாங்கள் அனுமதிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.

Source link