இறுதி அறிக்கை தயாராகிறது!

தமிழக முதல்வரான த.வெ.க., தலைவர் விஜய், கடந்தாண்டு கரூரில் தேர்தல் பிரசாரம் செய்த போது, கூட்ட நெரிசலில், 41 பேர் இறந்தனர். இது குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, அஜய் ரஸ்தோகி தலைமையில் மூவர் அடங்கிய குழுவை நியமித்து, விசாரணையை கண்காணிக்கவும் உத்தரவிட்டது.

த.வெ.க., தலைவர் விஜய், த.வெ.க., நிர்வாகிகள், தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி என, பலரையும் டில்லி அழைத்து, சி.பி.ஐ., விசாரணை செய்தது. மாதந்தோறும் விசாரணை நிலவரத்தை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவிற்கு, அறிக்கையாகவும் சி.பி.ஐ., அளித்து வந்தது.

தற்போது, விசாரணை முடிந்து, இறுதி அறிக்கையும் தயாராகிவிட்டது. இதை, இந்த வாரத்தில், நீதிபதி அஜய் ரஸ்தோகியிடம், சி.பி.ஐ., சமர்ப்பிக்க உள்ளது. இந்த அறிக்கையை நீதிபதியும், மற்ற இரண்டு மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகளும் படித்து, அதில் சில விளக்கங்களையும் சி.பி.ஐ.,யிடம் கேட்பர். அதன் பின், வரைவு அறிக்கை உறுதி செய்யப்படும் என, சொல்லப்படுகிறது.

இதையடுத்து, இறுதி அறிக்கை விரைவில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். உச்ச நீதிமன்ற அனுமதிக்கு பின், சி.பி.ஐ., நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். கரூர் சம்பவத்தை வைத்து, அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழக சட்டசபை தேர்தலின் போது, அரசியல் செய்தன. விரைவில் இதற்கு ஒரு முடிவு வர உள்ளது.

‘செல்பி’ பிரதமர்!

‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம், டில்லியை உலுக்கிக் கொண்டிருக்கிறது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் ஒரு பக்கம், பார்லிமென்டில் எதிர்க்கட்சியினர் அமளி மறுபுறம் என, டில்லியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்திற்கு, மாணவர் அமைப்பினர் உட்பட பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு குவிந்து வருகிறது.

இந்நிலையில், திடீரென ஒரு அதிரடி முடிவெடுத்தார் பிரதமர் மோடி. நாட்டு மக்களுக்கு, குறிப்பாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு, ‘மெசேஜ்’ சொல்ல விரும்பினார். இது போன்ற சமயங்களில், துார்தர்ஷனிலிருந்து, கேமரா சகிதமாக வந்து, பிரதமர் பேசியதை, பதிவு செய்து பின்பு வெளியிடுவர்.

ஆனால் வியாழன் இரவு, 10:15 மணிக்கு இது எதையும் பிரதமர் செய்யாமல், தன் மொபைல் போனை ஒரு, ‘ஸ்டேண்டில்’ வைத்து, அதன் எதிரே அமர்ந்து பேச தொடங்கிவிட்டார். இது அதிகாரிகள் மட்டுமின்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. காரணம், எந்த ஒரு பிரதமரும் இப்படி செய்ததில்லை. பொதுவாக டிவி வாயிலாகவே அனைவரும் பேசுவது வழக்கம்.

இந்த வீடியோவை, இரவு 11:00 மணிக்கு மேல், தன் சமூக வலைதளங்களில் ஒன்றான, ‘இன்ஸ்டாகிராம்’ வாயிலாக அவர் பிரதமர் வெளியிட்டார். ‘நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், கடுமையான சட்டம் கொண்டு வரப்போகிறோம்’ என, அந்த காணொளியில் தெரிவித்தார். 24 மணி நேரத்தில், இந்த வீடியோவை 30 கோடி பேர் பார்த்தனர்.

இதையடுத்து, மறுநாளும் இதே போல ‘செல்பி’ வீடியோவை வெளியிட்டு, இளைஞர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். இந்த வீடியோவையும் கோடிக்கணக்கானோர் பார்த்தனர். ‘பார்லியில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் போது, அறிவிப்புகளை நள்ளிரவில் இப்படி வெளியிடுவது தவறு’ என, காங்., குற்றஞ்சாட்டியது. இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதற்கு பதில், இப்படி வீடியோ வெளியிட்டு, ‘செல்பி’ பிரதமராகிவிட்டார்; இதனால் எந்த பயனும் கிடையாது’ என, மற்ற கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.

அடுத்தது யார்?

டில்லி அதிகாரிகள் வட்டாரங்களில், ஒரு விஷயம் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. அது, ‘அடுத்த கேபினட் செயலர் யார்?’ என்பதே. கேபினட் செயலர் என்பவர், நாட்டிலுள்ள அனைத்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கும் தலைவர். இந்திய அரசில் என்ன நடக்கிறது, உளவுத்துறை மற்றும் ‘ரா’ அமைப்பு எப்படி செயல்படுகிறது என, அனைத்து விபரங்களையும் அறிந்து வைத்திருப்பார். அத்துடன், பிரதமருக்கும் நெருக்கமாக இருப்பார்.

தற்போது, கேபினட் செயலராக உள்ள, தமிழரான டி.வி. சோமநாதன், அடுத்த மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார். இந்த பதவியில் உள்ளவர்களுக்கு, பதவி நீட்டிப்பு வழங்குவது வழக்கம். ஆனால், ‘எனக்கு பணி நீட்டிப்பு வேண்டாம்’ என பிரதமரிடம், சோமநாதன் சொல்லிவிட்டதாக பேசப்படுகிறது.

தற்போது, ‘நீட்’ விவகாரத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு, தீர்வு காண சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்ற மசோதாவை, இரண்டே நாளில் தயார் செய்ய உதவியவர், கேபினட் செயலர். இவர் பணி நீட்டிப்பு வேண்டாம் என கூறினாலும், இப்போதுள்ள சூழ்நிலையில் இவருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

ஒரு வேளை, இவருக்கு நீட்டிப்பு கிடைக்காவிட்டால், யார் இந்த பதவிக்கு வருவார்? இதற்கான பரிசீலனை பட்டியலில், சரண்யன் கிருஷ்ணன் மற்றும் கோவிந்த் மோகன் ஆகியோரின் பெயர்கள் உள்ளன. இதில், தமிழக அதிகாரியான, சரண்யன் கிருஷ்ணன், மத்திய அரசின் முக்கியத் துறையான, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலராக பணியாற்றி வருகிறார்.

‘ஏ.ஐ.,’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பாக பல விஷயங்களை இவர் செய்துள்ளார். இவரும் பிரதமருக்கு நெருக்கமானவர் என அறியப்படுகிறார். கோவிந்த் மோகன் தற்போது, உள்துறை செயலராக இருப்பவர். பல இக்கட்டான தருணங்களில் மத்திய அரசுக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கிய இவரும் கேபினட் செயலராக வாய்ப்புள்ளது என பேசப்படுகிறது. இந்த வார இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் கேபினட் செயலர் யார் என்பதை மத்திய அரசு அறிவிக்கும்.

தொடர்புக்கு: :ndussh@dinamalar.in

தரிசன கட்டணத்தை ரத்து கோரி ஆர்ப்பாட்டம்: அல்லிநகரம் கள்ளர் சாவடி, தேனி, தலைமை: மாவட்ட தலைவர் முருகன், ஏற்பாடு: ஹிந்து முன்னணியினர், மாலை 4:00 மணி.

Source link