‘உடலே மிகவும் உண்மையைப் பேசும் சாட்சி’: இளம்பெண் உயிரிழப்பு வழக்கில் மீண்டும் உடற்கூறாய்வு

எழுதியவர்: வினீத் உபாத்யாய்

சந்தேகத்திற்குரிய மரண வழக்கில் மனித உடலே “முதல் மற்றும் சில நேரங்களில் மிகவும் உண்மையைப் பேசும் சாட்சி” என்று குறிப்பிட்ட சென்னை உயர்நீதிமன்றம், முதற்கட்ட உடற்கூறாய்வு குறித்து தாய் கேள்வி எழுப்பியதை அடுத்து, 24 வயது இளம் பெண்ணின் மரணம் குறித்து புதிய விசாரணைக்கும், மீண்டும் உடற்கூறாய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க:

சிவக்கங்கை மாவட்டத்தில் உயிரிழந்த பெண்ணின் தாய் தாக்கல் செய்த வழக்கை நீதிபதி எல்.விக்டோரியா கெளரி ஜூலை 24 அன்று விசாரித்தார். மனுதாரர் தனது மகளின் இறப்பில் மீண்டும் உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என்றும், விசாரணையைச் சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு (எஸ்.ஐ.டி) மாற்ற வேண்டும் என்றும் கோரியிருந்தார். மேலும், வரதட்சணை கொடுமை குற்றச்சாட்டுகளை முன்வைத்த மனுதாரர், காவல்துறையின் விசாரணை மற்றும் முதல் உடற்கூறாய்வில் கடுமையான தவறுகள் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

“இயற்கைக்கு மாறான அல்லது சந்தேகத்திற்குரிய மரண வழக்குகளில், உடலே முதல் மற்றும் சில நேரங்களில் மிகவும் உண்மையைப் பேசும் சாட்சியாக மாறுகிறது… உடற்கூறாய்வு என்பது ஒரு சாதாரண நிர்வாகப் பணி அல்ல. அது நீதிக்கான சேவையில் அறிவியலை வைப்பதற்காகச் செய்யப்படும் புனிதமான மருத்துவ-சட்டப்பூர்வ பணி” என்று நீதிமன்றம் கூறியது.

எதிர் எதிர் கருத்துகளில் எதையாவது ஒன்றைத் தேர்ந்தெடுப்பது நீதிமன்றத்தின் கடமை அல்ல; மாறாக, உண்மை கண்டறியப்படும் செயல்முறை “சட்டப்பூர்வமாக வலுவாகவும், அறிவியல் ரீதியாக நம்பகமானதாகவும், பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கைக்குரியதாகவும்” இருப்பதை உறுதி செய்வதே நீதிமன்றத்தின் கடமை என்றும் அது மேலும் குறிப்பிட்டது.

இந்த ஆண்டு ஜனவரி 25 அன்று திருமணமான அந்தப் பெண், திருமணமான 5 மாதங்களுக்குள் ஜூன் 17 அன்று உயிரிழந்தார். கூடுதல் வரதட்சணையாக 5.5 சவரன் நகையைக் கேட்டுத் தனது மகள் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், உயிரிழந்த போது அவர் சுமார் 4 மாத கர்ப்பிணியாக இருந்தார் என்றும் அவரது தாய் குற்றம் சாட்டினார். கணவர் வீட்டில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சூழலை குடும்பத்தினர் கேள்விக்குட்படுத்தியுள்ளனர்.

நீதிபதி எல்.விக்டோரியா கெளரி, பெண்ணின் உடலைக் காலவரையின்றித் தொடர்ந்து பாதுகாப்பது மரணத்திற்குப் பிந்தைய கண்ணியத்தை வழங்குவதற்கு முரணாக அமையும் என்று தெரிவித்தார்.

உடலைக் காலவரையின்றித் தொடர்ந்து பாதுகாப்பது, மரணத்திற்குப் பிந்தைய கண்ணியத்தை வழங்குவதற்கு முரணாக அமையும் என்று நீதிபதி எல். விக்டோரியா கெளரி தெரிவித்தார்.

‘உடற்கூறாய்வில் உள்ள முரண்பாடுகள்’

திருச்சிராப்பள்ளி கே.ஏ.பி. விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரியின் தடயவியல் துறை இணைப் பேராசிரியர் டாக்டர் எஸ். அங்கயற்கண்ணி நடத்திய சுயாதீன தடயவியல் ஆய்வைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் இந்தத் தலையீடு வந்துள்ளது. அசல் உடற்கூறாய்வு பதிவுகள் மற்றும் வீடியோ பதிவுகளை ஆய்வு செய்யும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

உடற்கூறாய்வு அறிக்கை மற்றும் அதன் 101 வீடியோ பதிவுகளை ஆய்வு செய்த பிறகு, எழுதப்பட்ட அறிக்கைகளுக்கும் வீடியோ பதிவிற்கும் இடையே பல முரண்பாடுகள் இருப்பதை நிபுணர் சுட்டிக்காட்டினார். உடற்கூறாய்வு செய்யப்பட்ட நேரம், உடைகளின் பரிசோதனை, கழுத்துக்காயத்தின் ஆவணப் பதிவு, கழுத்துப் பகுதி ஆய்வு, மண்டை ஓட்டு அமைப்புகளின் பரிசோதனை, உயிரியல் மாதிரிகளைச் சேகரித்து பாதுகாத்தல் மற்றும் கர்ப்பம் தொடர்பான சான்றுகளைப் பதிவு செய்தல் ஆகியவற்றில் உள்ள முரண்பாடுகள் இதில் அடங்கும்.

எந்தவொரு மருத்துவரும் வேண்டுமென்றே தகவல்களை விடுத்தார்களா அல்லது எந்தக் காவல் அதிகாரியாவது ஆதாரங்களை அழித்தார்களா என்பதைத் தீர்மானிப்பதற்காக இந்த விசாரணை நடத்தப்படவில்லை என்று நீதிமன்றம் கூறியது. “இறுதிப் பதில் உடலிலிருந்தும், பாதுகாக்கப்பட்ட பொருட்களிலிருந்தும், டிஜிட்டல் பதிவுகளிலிருந்தும் மற்றும் நியாயமான விசாரணையிலிருந்தும் வர வேண்டும்” என்று கூறிய நீதிமன்றம், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் மறு உடற்கூறாய்வு, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை மற்றும் அறிவியல் பூர்வமாக உண்மை வெளிவருவதை உறுதிசெய்ய நீதித்துறை மேற்பார்வை ஆகியவற்றுக்கு நியாயம் கற்பிக்கிறதா என்பதே முக்கியப் பிரச்சனை என்று குறிப்பிட்டது.

மீண்டும் உடற்கூறாய்வு

முதல் உடற்கூறாய்வின் முடிவுகளைப் பெண்ணின் குடும்பத்தினர் ஏற்க மறுத்ததால், அவரது உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. தடயவியல் ஆதாரங்களைச் சரிபார்ப்பதற்கான வாய்ப்பு “புனிதமானது மற்றும் வரம்பிற்குட்பட்டது” என்று குறிப்பிட்ட நீதிமன்றம், பரிசோதனை மேலும் தாமதமானால் மதிப்புமிக்க ஆதாரங்கள் நிரந்தரமாக இழக்கப்படக்கூடும் என்று கூறியது.

உடற்கூறாய்வை மீண்டும் நடத்துவதற்காக, மூத்த தடயவியல் மருத்துவப் பேராசிரியர்கள், தடயவியல் நோயியல் நிபுணர், கதிரியக்க வல்லுநர், மகப்பேறு மருத்துவர் மற்றும் தடய அறிவியல் நிபுணர் ஆகியோரைக் கொண்ட பல்துறை மருத்துவக் குழுவை 24 மணி நேரத்திற்குள் அமைக்குமாறு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

உடலைக் காலவரையின்றி தொடர்ந்து வைத்திருப்பது மரணத்திற்குப் பிந்தைய கண்ணியத்திற்கு முரணானது என்று குறிப்பிட்ட நீதிமன்றம், புதிய உடற்கூறாய்வு மற்றும் தடயவியல் மாதிரிகள் சேகரிக்கப்பட்ட பிறகு, மருத்துவக் குழுவின் இறுதி அறிக்கைக்குக் காத்திராமல் உடலைக் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

“உடலைக் காலவரையின்றித் தொடர்ந்து பாதுகாப்பது மரணத்திற்குப் பிந்தைய கண்ணியத்திற்கு முரணானது” என்று உயர்நீதிமன்றம் கூறியது. மேலும் குடும்பத்தின் மதச் சடங்குகளின்படி உடலை எடுத்துச் செல்லவும் அடக்கம் செய்யவும் வசதிகளைச் செய்து தருமாறு மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் உத்தரவிடப்பட்டது.

வழக்கை கையில் எடுக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி)

சி.பி.சி.ஐ.டி அல்லது சிவகங்கை மாவட்டத்துடன் தொடர்பில்லாத பிற சிறப்புப் பிரிவைச் சேர்ந்த எஸ்பி (SP) அந்தஸ்திற்கு குறையாத அதிகாரி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு (எஸ்.ஐ.டி) விசாரணையை நீதிமன்றம் மாற்றியது.

அனைத்து விசாரணைப் பதிவுகள், தடயவியல் பொருட்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களைக் கைப்பற்றுவதுடன், அந்தப் பெண்ணின் மொபைல் போன், லேப்டாப், நகைகள், டைரி, திருமணப் பொருட்கள் போன்றவற்றை மீட்கவும் சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சிசிடிவி காட்சிகள், பெண்ணின் கடைசி தொலைபேசி உரையாடல்கள், அவர் கர்ப்பமாக இருந்ததாகக் கூறப்படும் பதிவுகளைப் பெறுதல் மற்றும் அவர் கண்டெடுக்கப்பட்ட அறை வெளியில் இருந்து பூட்டப்பட்டிருக்கலாமா என்பது குறித்தும் எஸ்டிஐ விசாரணை நடத்தும்.

நீதிமன்றம் குறிப்பிடுகையில், “ஒரு அரசியலமைப்பு நீதிமன்றம், உயிரோடு இருப்பவர்களின் குற்றத்தை முன்கூட்டியே ஊகிப்பதன் மூலம் இறந்தவரை மதிப்பௌரவம் செய்யாது. அதேசமயம், தகுந்த ஆதாரங்களுடன் கூடிய சந்தேகங்களை ஆராய மறுப்பதன் மூலம் பொது நிறுவனங்களைப் பாதுகாக்கவும் செய்யாது” என்றது.

சிசிடிவி காட்சிகள் உடலின் நகர்வு, உடைகளைக் கையாளுதல், உயிரியல் மாதிரிகளை முத்திரையிடுதல் மற்றும் உடற்கூறாய்வுக்கு முன்னும் பின்னும் பாதுகாப்புச் சங்கிலியைப் பராமரித்தல் ஆகியவற்றை நிறுவக்கூடும் என்பதால், இது விசாரணையில் ஒரு முக்கியமான ஆதாரமாக அமைகிறது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்த அவதானிப்புகள் தற்போதைய விசாரணையையோ அல்லது எதிர்கால குற்றவியல் நடவடிக்கைகளையோ பாதிக்காது என்பதைத் தெளிவுபடுத்தி, நீதிமன்றம் இந்த மனுவை முடித்து வைத்தது.

Source link