எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி; பார்லிமென்ட் இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பு

நமது நிருபர்

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் இன்று (ஜூலை 23) எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி காரணமாக இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

கடந்த 20ல் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், காங்., – சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய, ‘இண்டி’ கூட்டணியின் தொடர் அமளியால், முதல் இரு நாட்கள் எந்த அலுவல்களும் நடக்கவில்லை. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என, அக்கூட்டணி வலியுறுத்தி வருகிறது.

லோக்சபா நேற்று கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் மீண்டும் கடும் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் கூச்சல், குழப்பத்தால் ராஜ்யசபாவும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் இன்று (ஜூலை 23) காலை 11 மணிக்கு லோக்சபா கூடியதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல், குழப்பம் நிலவியது.

அவையை மதியம் 12 மணி வரை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார். அதேபோல் ராஜ்யசபாவும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி காரணமாக மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 4வது நாளாக இன்றும் எந்த அலுவல்களும் நடக்கவில்லை.

தனியே தன்னந்தனியே!

பார்லிமென்ட் வளாகத்தில் ஆளும் கூட்டணி எம்.பி.,க்களும், இண்டி கூட்டணி எம்பிக்களும் எதிரெதிரே போராட்டம் நடத்தினர். இரு தரப்பும் மாறி மாறி கோஷம் எழுப்பியதால் அங்கு களேபரமான சூழல் நிலவியது. திமுக எம்.பி..,க்கள் இந்த இரண்டு போராட்டத்திலும் பங்கேற்காமல், பார்லிமென்ட் வளாகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தனித்துப் போராட்டம் நடத்தினர்.

Source link