தமிழ் சினிமாவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் போல் முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் தனது குரலால் ஹிட் பாடல்களை கொடுத்தவர் தான் மலேசியா வாசுதேவன். எஸ்.பி.பி பாட முடியாமல் போன ஒரு பாடலான தான் இவர் இந்த அளவுக்கு பிரபலமாக முக்கிய காரணம் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.
தென்னிந்தியத் திரையுலகில் தனித்துவமான குரல் வளம் கொண்ட ஒரு பாடகர்களில் முக்கியமானவர் மலேசியா வாசுதேவன், மலேசியாவில் தமிழர்கள் இசைக்குழுக்களில் முக்கியப் பாடகராக இருந்த இவர், திரைப்பட வாய்ப்புகளைத் தேடி சென்னைக்கு வந்தார். சுமார் 8,000-க்கும் மேற்பட்ட தமிழ் பாடல்களையும் பாடியுள்ள மலேசியா வாசுதேவன், பல படங்களில் குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்களிலும் நடித்துள்ளார். அவரது மகன் யுகேந்திரன் மற்றும் மகள் பிரசாந்தினி ஆகியோரும் பின்னணிப் பாடகர்களாக உள்ளனர்.
இந்நிலையில் திரையுலகில் தனது வாழ்க்கை எப்படி தொடங்கியது என்று பாடகர் மலேசியா வாசுதேவன் கூறிய பேட்டி ஒன்று யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. அதில் பேசிய மலேசியா வாசுதேவன் கூறுகையில், “எனது மகன் பிறந்தபோது, எனது நண்பரான பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படம் தொடங்கப்பட்டது. அந்தப் படத்தின் பூஜை விழாவிற்கு எனக்கு அழைப்பு வந்தது. அந்த நிகழ்வின்போது, பூஜையில் பாட வேண்டிய பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களால் பாட முடியவில்லை, ஏனெனில் அவருக்கு தொண்டை வலி ஏற்பட்டது.
சாதாரணமாக பூஜையின்போது பாடல்களுக்கான டிராக்குகள் பயன்படுத்தப்படாது. இதனால் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஒரு மாற்றுப் பாடகர் தேவைப்பட்டார். அப்போது அங்கு இருந்த எனனை பார்த்த இளையராஜா, அந்தப் பாடலை ஒரு டிராக்காகப் பாடும்படி கேட்டுக்கொண்டார், அதன்படி நான் பாடியபோது பாடல் சிறப்பாக அமைந்தால் அதுவே அவருக்கு ஒரு அதிர்ஷ்டமாக அமைந்தது” என்றும் கூறினார்.
இதையடுத்து, வாசுதேவன் அவர்கள் பி.சுசீலாவுடன் இணைந்து “செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்கா” என்ற பாடலைப் பாடினார். இந்தப் பாடல் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று, அவரைத் திரையுலகில் ஒரு நிரந்தரப் பின்னணிப் பாடகராக நிலைநிறுத்தியதாக கூறினார். இந்த திருப்புமுனைக்குப் பிறகு, அவர் கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், சிகப்பு ரோஜாக்கள் போன்ற பல வெற்றிப் படங்களில் பாடினார். ஒருவருடைய கடின உழைப்புக்கு நல்ல நேரம் வரும்போது, அவர்கள் சாப்பிடக்கூட நேரம் இல்லாமல் மிகவும் பிஸியாகிவிடுவார்கள் என்று கூறி அவர் தனது அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார்.
