ஓவேலியில் அடுத்தடுத்து 2 பேர் பலி.. சிக்காமல் போக்கு காட்டும் ஆட்கொல்லி புலி- களத்தில் 150 வனத்துறையினர் – nilgiris tiger kills two people forest department search in 13 days

ஓவேலி அருகே இரண்டு பேரை தாக்கி கொன்ற புலியை பிடிக்க 12-வது நாளாக வனத்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டுள்ளனர். கூடுதலாக, அல்லூர் மற்றும் சில்வர் கிளவுட் எஸ்டேட் பகுதிகளில் மேலும் நவீன 5 GSM வசதியுடைய கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நீலகிரியில் 2 பேரை கொன்ற புலி..

மனித – வனவிலங்கு மோதல்கள் அதிகமுள்ள நீலகிரி மாவட்டத்தில், கடந்த ஆறு மாதங்களில் மட்டும் யானை, புலி மற்றும் காட்டுமாடு தாக்குதல்களுக்கு 12 பேர் பலியாகியுள்ளனர். குறிப்பாக கூடலூர் பகுதியில் அசம்பாவிதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.இந்தச் சூழலில், கூடலூர் அருகே உள்ள ஓவேலியில் கடந்த 9-ஆம் தேதி ராதாகிருஷ்ணன் என்பவரும், 21-ஆம் தேதி ரவிச்சந்திரன் என்பவரும் அடுத்தடுத்து புலி தாக்குதலுக்குப் பலியாகினர். இருவரின் உடல்களும் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிக்காமல் போக்கு காட்டும் ஆட்கொல்லி புலி!

இதனைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த பொதுமக்கள் மனித உயிர்களைப் பறிக்கும் புலியை உடனடியாகப் பிடிக்க வலியுறுத்தி, உடலைச் சாலையில் வைத்து தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சடலத்தைக் கைப்பற்ற முயன்ற காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு உருவானது. இறுதியில் காவல்துறையினர் சடலத்தை மீட்டு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைந்து போகச் செய்தனர்.

130+ கேமராக்களில் தீவிர கண்காணிப்பு

பின்னர் இந்த புலியை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து புலியை உயிரோடோவோ அல்லது மயக்க ஊசி செலுத்தியோ புலியை பிடிக்கும் பணியில் 12-வது நாளாக 150-க்கும் மேற்ப்பட்ட வனத்துறையினர் 136 கண்காணிப்பு கேமராக்கள் , 13 கூண்டுகள் வைத்து தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட பொம்மன் மற்றும் உதயன் ஆகிய இரண்டு பயிற்சி பெற்ற கும்கி யானைகள், புலியைத் தேடி கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

புலியை பிடிக்க தீவிர ஆபரேஷன் 150+ வனத்துறையினர்

வனத்துறை அலுவலர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் லாரிஸ்டன் எண்.4, பாலவாடி பழங்குடியினர் குடியிருப்பு, தெய்வமலை, நடுகூடலூர், மேல்கூடலூர், கோக்கால், அல்லூர் மற்றும் முதுமலை எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இரண்டு வனக்கால்நடை மருத்துவர்களுடன் இணைந்து, பிரத்யேக தேடுதல் மற்றும் தடயக் குழுக்கள் நீடில் ராக் பகுதிகள், ஃப்ராக் ஹில், கூடலூர் மலை, அல்லூர் மற்றும் சில்வர் கிளவுட் எஸ்டேட் பகுதிகளில் விரிவான களத்தேடுதல் மேற்கொள்கின்றனர்.

மற்றும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, லாரிஸ்டன் எண்.4, தெய்வமலை மற்றும் பாலவாடி பாடி பகுதிகளில் வசிக்கும் பள்ளி மாணவர்களுக்கு வனத்துறை வாகனங்கள் மூலம் போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது 130க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் புலி நடமாட்டம் பதிவாகியுள்ளதா என்பதையும், அதேபோல 13 கூண்டுகள் வைக்கப்பட்ட இடத்தில் கால் தடங்கல் மற்றும் எச்சம் உள்ளதா எனவும் வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Source link