'கங்கை ஆற்றில் சிக்கன் பிரியாணி சாப்பிடுவது ஒரு குற்றமேயில்லை' உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து

போபால்: “கங்கை ஆற்றில் சிக்கன் பிரியாணி சாப்பிடுவது குற்றமல்ல. அப்படியிருக்கையில், அதற்காக மூன்று மாதங்கள் ஒருவரை சிறையில் அடைத்தது எப்படி,” என, உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் சட்ட பல்கலை நிகழ்ச்சி ஒன்றில் கேள்வி எழுப்பினார்.

கருத்து சுதந்திரம்

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் உள்ள தேசிய சட்ட பல்கலையில், உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மறைந்த ஜி.பி.சிங்கின் நான்காம் ஆண்டு நினைவு சொற்பொழிவு நேற்று முன்தினம் நடந்தது.

இதில், உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான், ம.பி., உயர் நீதிமன்ற நீதிபதி விஷால் தகத் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் பேசியதாவது:

ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரம், அமைதியான போராட்டம் போன்றவற்றை குற்றமாக பார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, ஜாமின் பெறுவதிலும் தாமதம் ஏற்படுகிறது.

நிபந்தனைகள்

கங்கை ஆற்றில் படகில் இப்தார் நிகழ்ச்சி நடத்திய இளைஞர்கள், மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். கங்கை ஆற்றில் சிக்கன் பிரியாணி சாப்பிடுவது குற்றமல்ல.

அப்படியிருக்கையில், குற்றமில்லா செயலுக்காக பல மாதங்கள் சிறையில் அடைத்தது ஏன்?

அமைதியான போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களும் பல நாட்கள் காவலில் வைக்கப்படுகின்றனர்.

ஜாமின் வழங்கும் போது, பொதுக்கூட்டங்களில் பேசக் கூடாது, சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கக் கூடாது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.

சட்ட பல்கலை மாணவர்கள் கேள்வி கேட்கும் சூழலை உருவாக்க வேண்டும். கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தியதற்காக மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Source link