தமிழ்நாட்டுப் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்த முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ தற்போது அதிரடியாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு, இத்திட்டத்திற்கு கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் பெயரைச் சூட்டி புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.இனி இத்திட்டம் ‘ பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் ‘ என்று அழைக்கப்படும்.
பெயர் மாற்றத்தோடு மட்டுமன்றி, இந்த அரசு ஏழை எளிய மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இத்திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் பிரம்மாண்ட விரிவாக்க அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
காமராஜர் பெயர் சூட்டப்பட்டதன் பின்னணி என்ன?
கடந்த 2022-ஆம் ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களின் வருகையை அதிகரிக்கவும், பசியின்றி அவர்கள் கல்வி கற்கவும் முந்தைய அரசால் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு தமிழ்நாட்டில் புதிய நிர்வாக மாற்றங்களைக் கொண்டு வரும் ஒரு பகுதியாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அரசாணையின்படி (பத்தி 5-i), இத்திட்டத்திற்கு ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ எனப் புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஏழை மாணவர்களுக்குப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைத் தந்த காமராஜரின் பெயரிலேயே, காலை உணவுத் திட்டமும் மாற்றப்பட்டிருப்பது பொதுமக்களிடையே நெகிழ்ச்சியையும் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
6 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கு பிரம்மாண்ட விரிவாக்கம்
இதுவரை இத்திட்டம் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்காக மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்தது. இதன் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 37,447 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 19,34,230 மாணவ, மாணவியர் தினமும் காலையில் சுடச்சுட உணவு உட்கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.தற்போது இந்தத் திட்டத்தின் பலன் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.
சமூக சீர்திருத்தவாதி தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் இந்த மெகா விரிவாக்கம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என அரசு அறிவித்துள்ளது.
புள்ளிவிவரங்கள்: எத்தனை மாணவர்கள் பயன்பெறுவார்கள்?
இந்த புதிய அரசாணையின் மூலம் தமிழ்நாட்டின் கல்வித்துறையில் இணையவுள்ள புதிய மாற்றங்களின் புள்ளிவிவரங்கள் இதோ: புதிதாக இணையும் பள்ளிகள்: தமிழ்நாட்டில் உள்ள 15,454 அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகள். கூடுதல் மாணவர்கள்: 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் 15,14,274 மாணவ / மாணவியர் இதன் மூலம் புதிதாகப் பயனடைய உள்ளனர். திட்டமிடப்பட்ட வேலை நாட்கள்: கல்வியாண்டில் மொத்தம் 210 வேலை நாட்களைக் கணக்கில் கொண்டு இந்த ஊட்டச்சத்து திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டமான விரிவாக்கப் பணிகளுக்காக தவெக அரசு ஆண்டுதோறும் மொத்த உத்தேச செலவினமாக ரூ. 343,55,00,000/- (343.55 கோடி ரூபாய்) நிதி அனுமதி வழங்கியுள்ளது. மேலும், நடப்பு 2026-2027 ஆம் நிதியாண்டுக்கான முதற்கட்ட தேவைகளுக்கு ரூ. 217.63 கோடி நிதி ஒப்பளிப்பு (Sanction) செய்யப்பட்டுள்ளது. அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ நிதிப் பகிர்வு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன தினசரி உணவுச் செலவு: 12,87,133 மாணவர்களுக்கு 124 நாட்களுக்கு ஒரு மாணவருக்கு ஒரு நாளைக்கு ரூ.12.71 வீதம் மொத்தம் ரூ. 202,85,73,093/- ஒதுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை ஸ்பெஷல் பொங்கல்: திங்கட்கிழமைகளில் மாணவர்களுக்குப் பொங்கல் வழங்குவதற்காக, கூடுதலாக ஒரு மாணவருக்கு ரூ.0.29 வீதம் 23 நாட்களுக்கு மொத்தம் ரூ. 85,85,177/- தனி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் மத்தியில் எழுந்துள்ள சமூகத் தாக்கம்
ஏற்கனவே முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சில திட்டங்களின் பெயர்களை தவெக அரசு மாற்றி அமைத்துள்ள நிலையில், தற்போது இந்த காலை உணவுத் திட்டத்தின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தினாலும், மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.பெயர்கள் மாற்றப்பட்டாலும், ஏழை எளிய மாணவர்களுக்கான உணவுத் திட்டம் நிறுத்தப்படாமல், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் வளர் இளம் பருவ மாணவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இது அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை மேலும் கணிசமாக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source link
