சென்னை,
காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இணக்கமான சூழல் உருவாவதை உறுதி செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த பெண்கள் மீது தாக்குதல் – பெண்களை இழிவுபடுத்தினால் சட்டம் தன் கடமையைச் செய்யும் என சட்டமன்றத்தில் பஞ்ச் டயலாக் பேசும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?
சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களைப் பார்க்கச் சென்ற பெண் ஒருவரைத் தாக்கியதோடு, அதனைத் தட்டிக்கேட்ட பெண் வழக்கறிஞரையும் காவல்துறையினர் தாக்கியதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
ஒருபுறம், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் காவல்துறையைப் பாராட்டிப் பேசுகிறார். மறுபுறம், காவல் ஆய்வாளர் மிரட்டியதாகப் புகார் அளித்த நபர் அடுத்த நாளே படுகொலை செய்யப்பட்டதாகவும், காவல் நிலையத்திற்கு வரும் பெண்கள் மிரட்டப்பட்டு, அவமதிக்கப்பட்டு, தாக்கப்படுவதாகவும் வெளியாகும் செய்திகள், தமிழகத்தில் பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையே அவர்களுக்கு அச்சுறுத்தலாக மாறிவிட்டதா என்ற கேள்வியை எழுப்புகிறது.
பொதுமக்களின் குறைகளைக் களைய வேண்டிய காவல்துறையினரின் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்வதும், அவர்களின் அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு இடமளிப்பதும், அவர்கள் இழைக்கும் தவறுகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கு சமமாகும் என்பதை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உணர வேண்டும்.
எனவே, ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் காவலர்கள் பெண்களைத் தாக்கியதாக எழுந்துள்ள புகாரை விரிவாக விசாரித்து, குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இணக்கமான சூழல் உருவாவதை உறுதி செய்ய வேண்டும் என தவெக அரசையும், அதன் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
