குடும்ப செலவுகளை கணவன் – மனைவி சமமாக பங்கிட்டு கொள்ள வேண்டும் :குடும்பநல வழக்கில் ஐகோர்ட் அதிரடி

மும்பை:’வருமானம் ஈட்டும் கணவன், மனைவி இருவரும், விவகாரத்துக்கு பின் குடும்ப பராமரிப்பு, குழந்தைகளின் கல்வி செலவுகளை சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும். சமத்துவத்தை தேவைக்கு ஏற்றுவாறு தேர்ந்தெடுத்து உரிமை கோர முடியாது’ என, குடும்ப நல வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடும்ப தகராறு காரணமாக மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்ற கணவர், பீஹாரில் தனியே வசித்து வருகிறார். அவரது மனைவியும் குழந்தைகளும் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அந்தேரி பகுதியில் வசிக்கின்றனர்.

இந்நிலையில், கொரோனா காலத்தில் வேலை பறிபோனதால், ஜீவனாம்ச தொகையை 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக குறைக்க கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் கணவர் மனுத் தாக்கல் செய்தார்.

அதில், ‘தற்போது குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருவதால், மனைவி மற்றும் குழந்தைகளின் கல்வி செலவுக்காக வழங்கப்படும் ஜீவனாம்ச தொகையை பாதியாக குறைத்து உத்தரவிட வேண்டும். மும்பையின் அந்தேரி மற்றும் பான்வெல் பகுதியில் உள்ள இரு வீடுகளுக்கு மாத தவணை செலுத்தி வருகிறேன். நிதி நெருக்கடியை சமாளிக்க அந்தேரியில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டு பீஹாரில் உள்ள வீட்டில் சேர்ந்து வாழ அறிவுறுத்தினேன். அல்லது பான்வெல் வீட்டிற்கு குடியேறி, அந்தேரி வீட்டை விற்று கடன் பிரச்னையை சமாளிக்க, உதவுமாறு வலியுறுத்தினேன். இரு கோரிக்கைகளையுமே மனைவி நிராகரித்து விட்டார்’ என குறிப்பிட்டிருந்தார்.

மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சதாயே முன்னிலையில் இம்மனு விசாரணைக்கு வந்த நிலையில், கணவர் கோருவதில் எந்த தவறும் இல்லை என நீதிபதி தெரிவித்தார்.

இது குறித்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

கணவன், மனைவி இருவரும் வருமானம் ஈட்டும் ஒரு வீட்டில், அந்தேரி போன்ற உயர்தர பகுதியில் மனைவி வசிக்க விரும்பினால், அந்த வீட்டிற்கான மாத தவணையை தன் சொந்த வருவாயில் இருந்து செலுத்த முன் வரவேண்டும். அதை செய்யாமல், கணவரே முழு தவணையையும் செலுத்த வேண்டும் என எதிர்பார்ப்பதில் எந்த நியாயமும் இல்லை.

பாலின சமத்துவமும், உரிமைகளும் சாதகமாக இருக்கும் இடத்தில் மட்டுமே பயன்படுத்தக் கூடியது அல்ல. வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள விரும்பும்போது இருவருமே குடும்ப பாரத்தை சமமாக சுமக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு சிறந்த கல்வி கிடைக்க வேண்டும் என விரும்பும்போது, இருவருமே அதற்கான செலவை பங்கிட்டு கொள்ள வேண்டும்.

கணவரின் நிதி நிலைமை மற்றும் பொறுப்புகளை கருத்தில் கொண்டு ஜீவனாம்ச தொகையை பாதியாக குறைத்து வழங்க உத்தரவிடுகிறேன்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Source link